கறுப்பு பணம் பதுக்கியோர் தேசத் துரோகிகள்:ஜகத்குரு ஜக்கி வாசுதேவ்



ஓங்கி உயர்ந்த மலைக் குன்றுகள். அதை, எட்டிப் பிடிக்க முயலும் பாக்கு மரங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் முடிவில் துவங்குகிறது ஈஷா யோக மையம். தொலை தூரத்தில் கேட்கும் உளியின் ஓசையில், ஆளுயர பாறைகள், அதனதன் உருவம் பெறுகின்றன. மொத்தத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் ஜக்கி வாசுதேவ், ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே சந்திக்கிறார். நேரம் கடப்பது தெரியாதபடி பேசுகிறார். இனி அவர்:

அன்னா ஹசாரே, பாபா ராம்தேவ், பெஜாவர் பீடாதிபதி வரிசையில், நீங்கள் எப்போது உண்ணாவிரதம் இருக்கப் போகிறீர்கள்?
ஒரு கோரிக்கையை வன்முறை கொண்டும் நிறைவேற்றலாம்; உண்ணாவிரதம் இருந்தும் நிறைவேற்றலாம். இரண்டும் இல்லாமல், எதையும் சாதிக்க முடியாதது துரதிர்ஷ்டமே. இங்கு, ஊழல், கற்பனையே பண்ண முடியாத உயரத்தை எட்டிவிட்டது. நூறு, ஆயிரம், பத்தாயிரம், லட்சம், கோடி எல்லாம் தாண்டி, லட்சம் கோடி ஊழல்கள் நடக்கின்றன. இதனால் தான் நம் முன்னேற்றம் தடைபட்டிருக்கிறது.
தலைவர்கள் சரியாக இருந்தால், தேசம் முன்னேறும் என்பதற்கு குஜராத்தும், பீகாரும் முன்னுதாரணங்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மாதிரி இருக்கிறது. குஜராத்தும், பீகாரும் மட்டும் வேறு தேசம் போலிருக்கிறது.நல்லவர்கள் முதல்வர்களாகவோ, பிரதமர்களாகவோ இருந்தால், கடைசி வரை அவர்கள் தான் அந்தப் பதவியில் இருப்பர். ஆனால், யாருமே அப் படி செய்யவில்லையே.கறுப்புப் பணத்தை வெளிநாடுகளில் பதுக்கி வைப்பவர்களை, தேசத் துரோகிகள் என்றழைக்காமல், வேறெப்படி சொல்வது? ஒரு பக்கம் மக்கள் பசியாலும், பட்டினியாலும் வாடும்போது, இவர்கள் கறுப்புப் பணத்தில் திளைப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?இந்த கொடுமைகளை எல்லாம் தடுப்பதற்கு, மக்கள் நேரடியாக ஈடுபட வேண்டும். நாட்டு நடப்புகளில் நமக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர வேண்டும். அதற்கு, லோக்பால் வரவேண்டும். ஊழல், இங்கு கலாசாரமாகவே ஆகிவிட்டது. யாருக்கும் அதுபற்றிய குற்ற உணர்ச்சி இல்லை. இவற்றுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க, சமூக ஆர்வலர்களின் உண்ணாவிரதப் போராட்டங்கள் ஒரு கருவியாக இருக்கின்றன.

இப்படி ஆளாளுக்கு கிளம்பிவிட்டால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு? 
அவர்கள், மக்கள் பிரதிநிதிகள் மாதிரியே நடந்து கொள்வதில்லையே! ஏதோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் போலல்லவா நடந்து கொள்கின்றனர். அதனால் தானே இத்தகைய போராட்டங்களுக்கு அவசியம் ஏற்பட்டுள்ளது. செய்ய வேண்டிய வேலையை அரசு செய்யாததால் தானே, தங்கள் வேலையை விட்டுவிட்டு, மக்கள், வீதிக்கு வரவேண்டியுள்ளது.

அதற்காக, சாமியார்கள் அரசியல் செய்யலாமா?
ஏன்? அவர்களும் இந்தச் சமூகத்தின் அங்கம் இல்லையா? அவர்கள் இந்நாட்டு குடிமக்கள் இல்லையா? ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்க வேண்டும் தானே! அவர்கள் பின்னால், லட்சக்கணக்கான மக்கள் இருக்கின்றனர். அந்த மக்களுக்கு எது நல்லதோ, அதை அவர்கள் செய்கின்றனர். அரசியலில் தலையிடுவதா, வேண்டாமா என்பதெல்லாம், அவரவர் விருப்பம் இல்லையா?

அன்னா ஹசாரே விளம்பரப் பிரியராக இருக்கிறாரோ...
போராட்டத்துக்கு முன்பு வரை, அவர் காந்தியவாதியாகத் தெரிந்தார். வழிக்கு வரவில்லை என்றதும், இப்படி பட்டம் கட்டிவிட்டனர். ஹசாரேவுக்கு மாற்றாக பாபா ராம்தேவைப் பயன்படுத்த நினைத்தனர். முடியவில்லை என்றதும், அவர் பெயரையும் கெடுக்க முயற்சிக்கின்றனர்.ஒருவர் ஒரு விஷயத்தைச் சொல்லும் விதம் சரியில்லாவிட்டால் தான் என்ன? அவர் சொன்ன விஷயம் சரியா என்று பார்க்க வேண்டியது தானே.
ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை, பாபா ராம்தேவ் மழுங்கடித்துவிட்டாரா? 
நல்ல வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் தடுமாறிவிட்டார் என்று சொல்வேன். அவர் இப்பிரச்னையைச் சரியாகக் கையாண்டிருந்தால், இன்னும் நாலு பேர் சேர்ந்திருப்பர். மிகப் பெரிய போராட்டமாக வலுப்பெற்றிருக்கும்.
அது இருக்கட்டும். படுத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீது ஓர் அரசால் எப்படி தடியடி நடத்த முடிந்தது? அதுவும் தலைநகரில்! நாலாபுறமும் தடுப்புச் சுவர் கொண்ட மைதானத்தில், பெண்கள் என்றும் பாராமல் தாக்கினரே. ஜனங்களை அடிக்கும் அரசு எப்படி ஜனநாயக அரசாக இருக்க முடியும்! பழிவாங்கும் செயலுக்காக போலீசையும், வருமான வரித் துறையையும் பயன்படுத்த ஆரம்பித்தால் நாடு எப்படி உருப்படும்?

ஆனால், தன் அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து இருப்பதாக, அவரே சொல்லியிருக்கிறார்.
என்ன தப்பு? அந்த அறக்கட்டளை, மக்களால் நடத்தப்படுவது. அவர் ஓர் அடையாளம் மட்டுமே. அதை அவர், தன் பெயரிலேயே நடத்தியிருந்தால், யார் தடுத்திருக்க முடியும்? அறக்கட்டளைக்கு ஆயிரம் கோடிகள் இருந்தாலென்ன? அவர் எளிமையாகத் தானே இருந்தார்? தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லையே! அந்தச் சொத்துக்களுக்கு தணிக்கை நடந்து, கணக்கு காட்டியிருக்கிறாரே.அவரைத் தேடி மக்கள் கூட்டம் கூட்டமாகச் செல்கின்றனர். நன்கொடை வழங்குகின்றனர். நல்லது செய்யப்போய்த் தானே அவரைத் தேடிச் செல்கின்றனர்! நேற்று வரை நல்லவராகத் தெரிந்தவர், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்ததும் கெட்டவராகி விட்டாரா?

சாய் பாபாவின் படுக்கை அறையிலிருந்து, 12 கோடி ரூபாய் ரொக்கம் எடுக்கப்பட்டது...
அவரது உயரத்துக்கு, 12 கோடி ரூபாயெல்லாம் ஒன்றுமே இல்லை. அந்த அறையில் எவ்வளவு இருந்தது என்று, அவருக்கே தெரிந்திருக்காது. 
பக்தர்கள் கொடுத்ததை, அப்படியே வாங்கி ஓரமாக வைத்திருக்கிறார். அந்தப் பணத்தைப் பதுக்கி, அவர் என்ன செய்யப்போகிறார்? அவரைத் தேடி கோடிகள் கொட்டப்பட்டபோது, எதற்கு இந்தச் சிறிய தொகையை லட்சியம் செய்யப்போகிறார்! அவர் அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை என்பது தான் உண்மை!

பத்மநாபசுவாமி கோவிலில் கிடைத்த பல கோடி நகைகளை என்ன செய்யலாம்?
அங்கு மட்டுமா இருந்தது? இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இருந்தது. முஸ்லிம் மன்னர்களும், வெள்ளைக்காரர்களும் அதைக் கொள்ளையடிக்கத் தானே இங்கு வந்தனர்! அப்போது கொள்ளையடித்த பணத்தில் தான், ஐரோப்பிய பொருளாதாரம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர்கள் கொள்ளையடித்தது போக, மீதமிருந்த கோவில்களின் நகை எல்லாம் எங்கே? அதைக் கேட்காமல், இதை என்ன செய்வது எனக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்!பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் அரசாங்கம் கட்டட்டும். சுதந்திரம் கொடுத்தால், தனியார்கள் கட்டுவர். கோவில் சொத்தில் ஏன் கட்ட வேண்டும்? சுரண்டுவதை நிறுத்தினாலே அரசாங்கத்துக்குத் தேவையான பணம் கிடைத்துவிடும்.
எந்த நாட்டிலும் இப்படி ஒரு அநீதி கிடையாது. ஒரு மதத்தினர் மட்டும், அவரது விருப்பத்துக்கு ஏற்ப வழிபாட்டுத் தலம் கூட நடத்த முடியாது. அரசு எடுத்துக்கொள்ளும் என்று பயம்.

 கோவிலை ஆன்மிகவாதிகள் நடத்த வேண்டுமா? 
அரசு கிளார்க்குகள் நடத்த வேண்டுமா? மற்ற மத வழிபாட்டுத் தலங்களில் இப்படிச் செய்ய முடியுமா? தேசம் எரிந்துவிடும் என்பதால் தானே இந்து மதத்தில் மட்டும் பண்ணுகிறீர்கள்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது...மாநிலம், தொழில் துறையில் நல்ல வளர்ச்சி பெற்று வந்தது. ஆனால், ஊழல் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. அரசு மாறிவிட்டது.புதிய அரசு, பல்வேறு விஷயங்களை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறது. தொடர்ந்து, மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் பணியாற்ற என்னுடைய அன்பும் ஆசிகளும்!
 நன்றி :தினமலர் 17 /07 /2011  

லோக்பால் மசோதா

லோக்பால் என்றசொல்லுக்கு ‘மக்கள் மன்றம்’ அல்லது ‘மக்கள் நீதிமன்றம்’ என்று பொருள் கொள்ளலாம், தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டதுதான் இந்த லோக்பால் மசோதா. இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் மலிந்திருக்கும் ஊழலை அறவே ஒழிக்கும் வகையிலும், அடிமட்ட ஊழியர் முதல் பிரதம மந்திரி வரை ஊழல் புரியும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கோரிக்கை.


இந்த கோரிக்கையை வலியுறுத்திதான் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார் சமூக சேவகர் அண்ணா ஹசாரே அவர்கள். அவரது முக்கியமான கோரிக்கை என்னவென்றால் லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதும், அந்தக் கூட்டுக்குழுவில் பாதிபேர் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதுவும்தான். வரும் ஆகஸ்டு 15ம் தேதிக்குள், அதாவது சுதந்திர தினத்திற்குள், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு உறுதி கூறியுள்ளது.

அரசுத்துறை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்றகுற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்றஅமைப்புதான் லோக்பால் என்பது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம். லோக்பால் சட்டம் என்பது இன்று நேற்று முளைத்த பிரச்சனை அல்ல, பல்லாண்டு கால பிரச்சனை. 1966-ல் முதன்முதலாக நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில் மத்திய அரசுக்கு லோக்பால் அமைப்பும் மாநில அரசுகளுக்கு லோக் ஆயுத்தா என்றஅமைப்பும் தேர்தல் ஆணையம் போல சுயேச்சையாக செயல்பட்டு ஊழல் புகார்களை விசாரிக்க ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு. 1968ல் லோக்பால் மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக மாற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு 1971, 1977, 1985, 1989, 1998, 2001 ஆண்டுகளில் 8 முறை தாக்கல் செய்யப்பட்ட மசோதா இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு முந்தைய சட்ட வடிவில் உள்ள மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறஅதிகாரம் இல்லை, புகார்களை பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்,பி,-க்கள் மூலமாகத்தான் புகார்களை பெறவேண்டும். புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாது, சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனைப் பெற்றாலும், ஊழல் செய்தவர் ஊழல் மூலமாக சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

ஆனால் உண்ணாவிரதத்தின் வாயிலாக வலியுறுத்தப்படும் லோக்பால் சட்டம் உருவானால் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அந்தப் புகாரை விசாரித்து லோக்பால் விரைந்து நடவடிக்கை எடுக்கும். யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முடியும்.

தற்போது அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் ‘இந்திய தண்டனை சட்டம் 1860′ மற்றும் ‘ஊழல் தடுப்பு சட்டம் 1988′ ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஊழல் புரிந்தோர் மீது காவல் துறையோ, வேறு புலனாய்வுத்துறையோ நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும். அரசின் நிர்வாகத்துறையைப் பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.

இந்த லோக்பால் சட்டம் நிறைவேற்றப் பட்டால், இச்சட்டம் அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனைக் கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். காலதாமதம், அலைக்கழிப்பு ஏதும் இல்லாமல் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், லோக்பால் அமைப்புக்கு காவல்துறை அந்தஸ்து வேண்டும் என்று ஹசாரேயின் வரைவு மசோதா வலியுறுத்துகிறது. ஒருவர் மீது குற்றம்சாட்டி, கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுக்க இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் அதிகாரம் உள்ளது. ஒன்று மாநில காவல் துறை, மற்றொன்று மத்திய சி.பி.ஐ. லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் லோக்பால் இந்த வரிசையில் மூன்றாவது அமைப்பாக இருக்கும்.

லோக்பால் மசோதா தயாரிப்புக்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் ஐந்து பேரும், பொதுமக்கள் தரப்பில் ஐந்து பேரும் அங்கம் வகிப்பர். அரசு தரப்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி (தலைவர்), சிதம்பரம், வீரப்ப மொய்லி (ஒருங்கிணைப்பாளர்), கபில்சிபில், சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் பிரதிநிதிகளாக அன்னா ஹசாரே, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் (இணைத்தலைவர்), வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழு ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் மசோதா தயாரிப்பு பணிகளை முடிக்கும்.

ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹசாரே வெளிப்படுத்தியிருக்கிறார். மக்கள் குரலே மகேசன் குரல். அந்த வகையில் பார்த்தால் அண்ணா ஹசாரேவின் குரல் மக்கள் குரலே. அண்ணா ஹசாரே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் ஓட்டுனராக பணிபுரிந்தவர். ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு நேர சமூக சேவகராக உள்ளார். ‘ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கம்’ என்றஅமைப்பை ஏற்படுத்தி பல போராட்டங்கள் நடத்தியவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த அரும்பாடுபட்டவர். இவருக்கு சொத்து இல்லை, வங்கியில் சேமிப்பு இல்லை.

இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரம் பெற்றசில மாதங்களிலேயே அதாவது 1948ம் ஆண்டே தொடங்கிவிட்டது. ராணுவத்திற்காக ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்தியத் தூதராக இருந்த வி,கே,கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேயில்லை. அவரை 1956ல் மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத மந்திரியாக நியமித்தது இந்திய அரசு. அன்று முதல் இன்று வரை 1981 போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 1990 ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், 1996 கார்கில் சவப்பெட்டி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கல் ஊழல் என ஊழல் தொடர்கதையாகி விட்டது.

இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காக தண்டனை பெற்றஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் ஒரு சிலர் மட்டுமே. பெரும்பாலான அமைச்சர்கள் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள். இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை கேட்கவோ, தடுக்கவோ முறையான சட்டம் தற்போது இல்லை. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லாமல், தண்டிக்கவும் முடியாமல் போனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்.

இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக வடிவமைத்த நேரு அப்போது சொன்னார், “ஜனநாயகம் என்பது மிகச் சிறந்த தேர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இருப்பதிலேயே இதுதான் பலவீனங்கள் குறைந்த தேர்வு. இந்த நாட்டை உலகின் வலுவான ஜனநாயக நாடாக மாற்றுவது இனி இந்த நாட்டின் மக்களிடம்தான் இருக்கிறது” என்று. அவரின் கருத்து இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானது. லோக்பால் மசோதா என்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. பொதுமக்கள் தரப்பும், அரசு தரப்பும் லோக்பால் மூலம் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். ஊழலுக்கு எதிரான இந்தப் பயணம் வெற்றி பெற்றால் இந்திய நாட்டுக்கு நிச்சயம் ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

கர்மவீரர் காமராஜர்


படிக்காத மேதை, ஏழை பங்காளன், கர்ம வீர்ர், பாரத ரத்னா, கிங் மேக்கர் என்று எல்லோராலும் புகழப்படுகின்ற  கர்மவீரர்  காமராஜர் பல்வேறு தொண்டுகள் ஆற்றி மக்களின்மனதில் நீங்காத இடம் பெற்றவர். தமிழக முதலமைச்சராக, அகில இந்திய காங்கிரஸின் தலைவராக, சிறப்பாகப் பணியாற்றிய – அவரது ஆட்சிக்காலத்தில்தான் கல்விக்கூடங்கள் அதிகமாகத்திறக்கப்பட்டன.
இலவச சீருடை, மதிய உணவுத் திட்டம் போன்ற மகத்தான திட்டங்களை உருவாக்கி, அதனைச் செம்மையாகச் செயல்படுத்தியவர் நம் தலைவர் காமராஜர். அவரது எளிமையான, புனிதமான வாழ்க்கையை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமைகிறது.
1. வாழ்க்கை நிகழ்வுகள்

பிறப்பு

இராமநாதபுரம் மாவட்டம் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 – ம்நாள் அழைக்கப்படும் நகரம் முன்பு விருதுபட்டி என்றே அழைக்கப்பட்டது.
காமராஜரின் தந்தை பெயர் குமாரசாமி நாடார். தாயார் சிவகாமி அம்மாள் ஆவார்.
முதலில் காமராஜருக்கு “காமாட்சி” என்று பெயரிட்டார்கள். காமாட்சி என்பது அவர்களின் குல தெய்வமான காமாட்சி அம்மனின் பெயராகும். சிவகாமி அம்மாள் காமராஜரை “ராஜா” என செல்லமாக அழைத்து வந்தார். பின்னர் காமாட்சி மற்றும் ராஜா ஆகிய பெயர்களை இணைத்து காமராஜர் என்றே அழைத்தார்கள்.
காமராஜரின் தந்தை விருதுப்பட்டியில் தேங்காய் மொத்த வியாபாரம் செய்து வந்தார்.
தாய் மாமன் கருப்பையா நாடார் ஜவுளிக்கடை வைத்திருந்தார். இன்னொரு தாய்மாமன் காசி நாராயண நாடார் திருவனந்தபுரத்தில் மரக்கடை வைத்த நடத்தி வந்தார்.
காமராஜர் தங்கை பெயர் நாகம்மாள். அவர் மீது காமராஜர் அதிக பாசம் வைத்திருந்தார்.
பள்ளிப்படிப்பு

5 வயதில் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். காமராஜர் ஏனாதி நாயனார் வித்யாலாயா ஆரம்ப몮பள்ளியிலும் பயின்றார். இளம் வயதில் கபடி விளையாட்டில் மிகவும் ஆர்வம் கொண்டு காமராஜர் விளங்கினார்.
அரசியல் ஆர்வம்

இளம் பருவத்திலேயே காமராஜர் அரசியல் கூட்டங்களில் கலந்து கொண்டார். தலைவர்களின் உரைகளைக் கேட்க அதிக ஆர்வமாக இருந்தார்.
படிப்புக்கு முற்றுப்புள்ளி

காமராஜருக்கு 6 வயது இருக்கும்போதே 1909 ஆம் ஆண்டு காமராஜரின் தந்தை குமாரசாமி நாடார் காலமாகிவிட்டார். தந்தையை இழந்த காமராஜர், சில ஆண்டுகளே பள்ளிக்குச் சென்றார். பின்னர் தனது 12 – வது வயதில் படிப்பை நிறுத்த வேண்டிய நிலை உருவாகியது. அதன் பின்னர், ஒரு ஜவுளிக்கடையில் காமராஜர் வேலையைப் பார்த்தார். பின் அவரது தாய் மாமன் மூலம் தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார்.
நாட்டுப் பற்று

இளம் வயதிலேயே நாட்டுபற்று கொண்ட காமராஜர், செய்தித் தாள்களைத் தினமும் படித்து அரசியல் பற்றி தெரிந்து கொண்டார்.
நாட்டின் விடுதலைக்காக மக்கள் அப்போது போராடி வந்தார்கள். விடுதலைக்காகப்போராடுபவர்களை வெள்ளையர்கள் சிறை பிடித்தார்கள். கொடுமைப்படுத்தினார்கள்.
இந்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் மற்றும் சட்ட மறுப்பு இயக்கத்தில் தீவிரமாகக் கலந்து கொண்டார்.
திருமண ஏற்பாடு

திருமணம் செய்து வைத்தால் குடும்பத்தைக்கவனிப்பார், தொழிலிலும் அக்கரையுடன் இருப்பார். காமராஜருக்குப் பொறுப்பு உண்டாகும் என அவரது தாய் சிவகாமி அம்மாள் நினைத்தார். காமராஜரின் தாய், மாமனாருடன் சேர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தனர்.
இதனை அறிந்த காமராஜர் தனக்கு திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். திருமணம் வேண்டாம் என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததால்தாயார் சிவகாமி அம்மாள் திருமணம் பற்றி பிறகு வற்புறுத்தாமல் விட்டுவிட்டார்.
சுதந்திர போராட்ட ஈடுபாடு

திருவனந்தபுரத்தில் மரக்கடை வியாபாரம் செய்யும் இன்னொரு தாய்மாமனாரான காசிநாடாரின் கடைக்கு அனுப்பினால் காமராஜரின் கவனம் தொழில் மீது பதியும் எனக் கருதிய தாய் சிவகாமி அம்மாள். காமராஜரைத் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைத்தார்.
காமராஜர் திருவனந்தபுரம் வந்த நேரத்தில் கேரளாவில் சாதிப் போராட்டங்கள் நடந்தன. இனவேற்றுமைக்கொடுமைகள் நீங்க ஈ.வெ.ரா. பெரியார் வைக்கம் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தை நடத்தினார். காமராஜர் அந்தப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். கேரளாவில் நடந்த எல்லா சுதந்திரப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு நாட்டு விடுதலைக்காகப்போராடினார்.
இதனால் காமராஜரின் கவனம் திசை திரும்பியது. தாய் மாமனார் மனம் வருந்தினார். விருதுபட்டியில் தொழிலில் கவனம் இல்லையென்று திருவனந்த புரத்திற்கு அனுப்பி வைத்தார்கள். ஆனால் இங்கு இப்படி தொழிலில் கவனம் இல்லாமல் காமராஜ் இருக்கிறாரே என எண்ணி மீண்டும் காமராஜரை விருதுப்பட்டிக்கு அனுப்பி வைத்தார்.
அரசியல் போராட்டக் களங்கள்

தனது சொந்த ஊரான விருதுபட்டிக்கு மீண்டும் வந்தார் காமராஜர். காங்கிரஸ் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். 1923 ஆம் ஆண்டு நாகபுரி கொடிப்போராட்டத்தில் பங்கு கொண்டார். அதே ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல் போராட்டத்திலும் கலந்து கொண்டார்.
பின்னர் 1925ஆம் ஆண்டு கடலூரிலிருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் பணிக்காக 1926 ஆம் ஆண்டு சத்தியமூர்த்தி – சீனிவாச அய்யங்கார் ஆகியோருடன் பணிபுரிந்தார் சென்னையில் 1927 ஆம் ஆண்டு கர்னல் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தை நடத்த அண்ணல் காந்தியிடம் அனுமதிபெற்றார். போராட்டம் நடைபெறுவதற்குள் அரசாங்கமே நீல் சிலையை அகற்றிவிட்டது.
1930 ஆம் ஆண்டு வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் இரண்டாமாண்டு அலிபூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1931 ஆம் ஆண்டு காந்தி – இர்வின் ஒப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார்.
இராமநாதபுரத்திலிருந்து சென்னை மாகாணக் காங்கிரஸ் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933ம் ஆண்டு காமராஜர் மீது விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீஸ் ஸ்டேஷன் வெடி குண்டு வழக்கு பொய்யாக உருவாக்கப்பட்டது. இந்த வழக்கில் காமராஜர் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்படாத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
காமராஜரின் உழைப்பால் 1934 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், பெருவாரியான வாக்குகளைப்பெற்று காங்கிரஸ் வென்றது. 1936 ஆம ஆண்டு காரைக்குடியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டித் தேர்தலில் சத்தியமூர்த்தி தலைவராகவும், காமராஜர் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
1937 – ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் சாத்தூர் தொகுதியில் வேட்பாளராக இருந்து வெற்றி பெற்றார். 1940 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
1941 ஆம் ஆண்டு யுத்த நிதிக்கு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்த்தால், கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
நகராட்சித் தலைவர்

விடுதலைப் போரட்டத்தில் தீவிரமாக்க் காமராஜர் ஈடுபட்டார். இதனால் கைது செய்யப்பட்டு சிறையி அடைக்கப்பட்டார். அந்த வேளையில் விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேரந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருக்கும் போதே நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதால் நகர் மன்றக் கூட்டங்களில் காமராஜர் கலந்து கொள்ளவில்லை. 1942ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் காமராஜ் விடுதலை ஆனார்.
1942 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி நகர் மன்றக்கூட்டம் நடைபெற்றது. துணைத்தலைவர், கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காமராஜர்-
“என்னை நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுத்தது குறித்து மகிழ்ச்சி, எனக்குப்பல முக்கிய பணிகள் இருப்பதால் நான் நகர் மன்றத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன்” என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
1942 ஆகஸ்டு மாதம் போராட்டத்தில் கைது செய்யப்பட்டார். அமராவதி சிறைச்சாலையில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். பின்னர் அவர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். 1945இல் காமராஜர் விடுதலை செய்யப்பட்டார். 1946 -ஆம் ஆண்டு மே மாதம் 16ம் நாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றார்.
பின்னர் அதே ஆண்டு சென்னை சட்ட மன்றத்திற்கும் காமராஜர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15ஆம்நாள் இந்தியா விடுதலை பெற்றது. பண்டித நேருவின் தலைமையில் இடைக்கால அரசு உருவானது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆனார். 1948ஆம் ஆண்டு மூன்றாவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஆனார். 1950 ஆம் ஆண்டு நான்காவது முறையாகத் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆனார். 1954ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ம் நாள் சென்னை மாநிலத்தின் முதலமைச்சர் ஆனார்.
காமராஜர்திட்டம் (கே பிளான்)

காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்தார். அப்போது காங்கிரஸ் கட்சியில் சில பிரச்சனைகள் உருவாகின. எனவே காமராஜர் ஒவ்வொரு மாநிலத்திலுள்ள மூத்த தலைவர்களும் நீண்ட நாட்கள் பதவி வகிக்கின்றவர்களும், ஆட்சிப் பணியை விட்டு விலகி கட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்ற் திட்டத்தை பிரதமர் ஜவஹர்லால் நேருவிடம் கூறினார்.
இந்தத் திட்டத்தைப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வரவேற்று ஆதரித்தார்; மிகவும் பாராட்டினார்; உலகத்தில்லுள்ள நாளிதழ்களெல்லாம் பெருந்தலைவர் காமராஜரின் இந்தத் திட்டத்தைப் பாராட்டின. மூத்த தலைவர்கள் பதவி விலகும் திட்டத்தை “காமராஜர் திட்டம்” என்றே அழைத்தார்கள். இதனை ‘கே பிளான்’ என்றே கூறினார்கள்.
தான் கொண்டுவந்த திட்டத்தைச் செயல்படுத்த பெருந்தலைவர் காமராஜர் 1963ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
காமராஜரின் இந்த துணிச்சலான செயலைக் கண்டு உலகமே பாராட்டியது.
காலா காந்தி

1964 ஆம் ஆண்டு புவனேஸ்வரத்தில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டிற்கு பின்பு காமராஜரை ‘காலாகாந்தி’ (கருப்புக் காந்தி) என்றே அழைத்தார்கள். காந்திஜியின் மறு அவதாரமாக்க் கருதினார்கள்.
ராஜதந்திரி

1965ஆம் ஆண்டு பிரதமர் பதிவியில் இருக்கும்போதே ஜவஹர்லால் நேரு காலமானார். அவருக்கப் பின் யாரைப் பிரதமராக்குவது என்று பல கேள்விகள் எழுந்தது. தனது அரசியல் ஞானத்தால் போட்டியின்றி பிரதமரை தேர்ந்தெடுக்கும் வகையில் லால்பகதூர் சாஸ்திரியை பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்க வழி செய்தார். அதனால் இவரை ராஜதந்திரி என்றே அனைவரும் புகழ்ந்தார்கள்.
கிங் மேக்கர்

ரஷியாவிற்குச் சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி அங்கு காலமானதால் மீண்டும் பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்தது. அந்தநிலையில் பிரதமர் இந்திரா காந்திக்கும், மொரார்ஜிதேசாய்க்கும் இடையில் சமாதானத்தை உருவாக்கப் பெரும் முயற்சி எடுத்தார் காமராஜர்.
போட்டியிலிருந்து விலக மொரார்ஜிதேசாய் மறுத்துவிட்டதால் இந்திரா காந்தியைப் பிரதமராக்க, கடுமையாக உழைத்தார். இந்திராகாந்தியைப் பிரதமராக்கிக் காட்டினார்.
இதனால் பெருந்தலைவர் காமராஜரை கிங் மேக்கர் (மன்னர்களை உருவாக்குபவர்) என்றே அழைத்தார்கள்.
தேர்தலும் விபத்தும்

1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் விருது நகர் தொகுதியில் சட்டசபை வேட்பாளராக போட்டியிட்டார். தென்மாவட்டங்களில் பொது தேர்தலில் நின்ற மற்ற வேட்பாளர்களுக்காகத் தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவர் சென்ற கார் விபத்துக்குள்ளானது. விபத்தில் காயம் அடைந்ததால் தேர்தலில் பிரச்சாரம் செய்ய இயலவில்லை. தேர்தலில் பெருந்தலைவர் காமராஜர் வெற்றிபெற இயலாத நிலையும் உருவாகியது.
நாகர் கோவில் வெற்றி

கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் தொகுதியில் நடைபெற்ற பாராளுமன்ற இடைத்தேர்தலில் காமராஜர் போட்டியிட்டு அமோக வெற்றி அடைந்து எம்.பி. ஆனார்.
சரித்திர நாயகன்
1975 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி பிறந்த நன்னாளில் காமராஜர் இந்த உலகை விட்டுப் பிரிந்தார்.
பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி:


தனியே எனக்கோர் இடம் வேண்டும் – தலை
சாயும் வரை நான் அழ வேண்டும்.
வானகம் போய்வர வழி வேண்டும் – எங்கள்
மன்னனை நான் பார்த்து வரவேண்டும்
தாயே எனக்கொரு வரம் வேண்டும்- என்
தலைவனை மீண்டும் தர வேண்டும்.
தமிழே எனக்கொரு மொழி வேண்டும் – அவன்
தன்மையைச் சொல்லிநான் தொழவேண்டும்.
இருப்பேன் பலநாள் என்றானே – எம்மை
ஏய்த்தது போல் இன்று சென்றானே – அவன்
சிரிக்கும் அழகைப் பார்ப்பதற்கே – அந்தத்
தேவன் அருகினில் அழைத்தானோ?
பறக்கும் பறவைக் கூட்டங்களே – எங்கள்
பாரத வீரனைக் காண்பீரோ – இங்கு
துடிக்குங் கோடி உள்ளங்களை – அந்தத்
தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ!
என்ற கண்ணதாசனின் வரிகள் நம் அனைவர் கண்களிலும் நீர் த்தும்ப வைத்துவிடுகிறது அல்லவா?
2. முதலமைச்சர் காமராஜர்

1954ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் தேதி காமராஜர் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். 1954ஆம் ஆண்டு முதல் 1963ஆம் ஆண்டு வரை முதல்வராக பணியாற்றிய காமராஜர் எளிமையின் சின்னமாக விளங்கினார்.
வீண் விளம்பரங்களை வெறுத்த காமராஜர், கிராம மக்கள் நலனில் பெரிதும் அக்கரை காட்டினார். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் தானே சுற்றுப்பயணம் செய்து கிராம பிரச்சனைகளை நேரில் கண்டறிந்தார். அதனை நீக்க புத்தம் புதிய செயல் திட்டங்களை தீட்டினார்.
கல்விக்கண் கொடுத்தவர்

ஒருமுறை சுற்றுப்பயணத்தின் போது ஒரு கிராமத்திற்கு காரில் காமராஜர் சென்று கொண்டிருந்தார். அப்போது ஆடு மேய்க்கின்ற சிறுவன் ஒருவனைப்பார்த்து காரை நிறுத்தச் சொன்னார். காரைவிட்டு இறங்கி சிறுவனிடம் வந்தார் காமராஜர்.
“தம்பி நீ பள்ளிக்கூடம் போகலியா? ஏன் போகவில்லை?” எனக் கேட்டார்.
“எங்க ஊரில் பள்ளிக்கூடமே கிடையாதே. நான் எப்படி பள்ளிக்கூடம் போகமுடியும்?
உங்கள் ஊரில் பள்ளிக்கூடம் இருந்தால் நீ படிப்பாயா?” என அவனிடம் கேட்டார் காமராஜர்.
“பள்ளிக் கூடத்திற்கு நான் போயிட்டால் சோறு யார் தருவார்கள்?” என எதிர்க்கேள்வி கேட்டான் சிறுவன்.
“ஓ…அப்படியா.. சரி உனக்கு சோறு தந்தால் நீ படிப்பாயா?” என காமராஜர் கேட்டார்.
“ஆமாம்” என்ற சிறுவன், “என் அப்பாவிடம் கேளுங்கள்” என்றான்.
உணவும் கொடுத்து பள்ளிக்கூட வசதியும் செய்து கொடுத்தால் கிராமங்களில் கல்வித்தரம் உயரும் என நம்பிய காமராஜர் சென்னை வந்த உடனே அப்போதைய பள்ளிக்கல்வி இயக்குனர் நெ.து. சுந்தர வடிவேலு அவர்களை அழைத்து “மதிய உணவுத திட்டத்தை” உடனே அமுல் படுத்துங்கள்.
எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. ஏழைச்சிறுவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிக்க வேண்டும். என உத்தரவிட்டார். இதன் பலனாக 1956 – ம் ஆண்டு ஏழை மாணவர்களுக்கு மதிய உணவுத்திட்டம் மூலம் இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. 1960ஆம் ஆண்டில் இருந்து ஒன்றாம் வகுப்பு முதல்பள்ளி இறுதி வகுப்பு வரை கல்வி, கட்டணமல்லாமல் இலவச் கல்வியும் அறிமுகப்படுத்தப்பட்டது.
காமராஜர் ஆட்சியில்தான் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் சீரிய திட்டமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் ஆரம்பப்பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.
ஏழை, பணக்கார மாணவர்கள் என்ற வித்தியாசம் கல்வி நிலையங்களில் இருக்கக்கூடாது என்பதை உணர்ந்த காமராஜர் சீருடை வழங்கும் சீரிய இலவச்ச் சீருடை வழங்குவதன் மூலம் ஏழை மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் ஏற்படவும் வழிவகுத்தார்.
அரசியல் பணி

மாநில முதல்வர் இருக்கும் தகுதி பெரும் பணக்கார்ர்களுக்கும் மிட்டாமிராசுதார்ர்களுக்கும் பட்டதாரிகளுக்கும் மட்டுமே உண்டு என்பதை பொய்யாக்கி சாமானியனும் மாநில முதலமைச்சர் ஆகலாம் என்பதை நிரூபித்துக் காட்டிய முதல் மனிதர் காமராஜர்தான். ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்திற்குச் சாவு மணி அடித்தது அவரது மிகப் பெரியச் சாதனை.
பதவி ஆசை அற்றவரே பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காகவும்நேருவிற்குப் பிடிக்காதவர்களைப் பதவியிலிருந்து ஒழித்துக் கட்டவும் காமராஜர் பதவி விலகும் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்தார். இது அவரது அரசியல் நுண்ணறிவுக்கு எடுத்துக்காட்டு ஆகும். நேருவுக்குப் பின் லால்பகதூரைப் பிரதமராக்கியது அவரது அரசியல் திறமைக்கு தக்கச்சான்று ஆகும்.
“இந்தியாவைக் காப்போம் – ஜனநாயகத்தைக் காப்போம்” என்பது விருதுநகர் வீர்ரின் வேத வாக்கு.
அணைக்கட்டுகள்

காமராஜர் ஆட்சிக்காலத்தில் சாத்தனூர் அணை கட்டப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெற்றன். இந்தத் திட்டத்திற்காக சுமார் இரண்டரைக் கோடி ரூபாய் செலவானது.
மதுரையில் உள்ள வைகை அணையும் இரண்டரைக் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர்நிலம் பாசன வசதி பெற்றது.
சுமார் 3 கோடி செலவில் அமராவத அணை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் 47,000 ஏக்கர் பாசன வசதி பெற்றது.
நெல்லை மாவட்டம் தாரிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணிமுத்தாறு அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 20,000 ஏக்கர் நிலம் கூடுதல் பாசன வசதி பெற்றது.
1,100 ஏக்கர் பாசன வசதி பெரும் வகையில் வாலையார் அணை 1 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டது.
இரண்டு கோடி ரூபாய் செலவில் கிருஷ்ணகிரி அணையும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் 2 லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெறும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கீழ்பவானித் திட்டம் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் ஏற்படுத்தப்பட்டது.
சுமார் ஒன்றரைக்கோடி ரூபாய் செலவில் புள்ளம்பாடி திட்டம் உருவாக்கப்பட்டதால் சுமார் 22 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்றன.
சுமார் 75 லட்சம் ரூபாய் செலவில் தென்னாற்காடு மாவட்டம் கோமுகி ஆற்றுத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் 8,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றது.
இவை தவிர கன்னியாகுமரி மாவட்டம் பேச்சுப்பாறை அணை, கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை ஆகும்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா அணையும் கர்மவீர்ர் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தொழில் நிறுவனங்கள்

காமாரஜர் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. குறிப்பாக சென்னை கிண்டியிலுள்ள தொழிற்பேட்டைகள், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேணன் ஆகியவை காமராஜர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.
இவை தவிர சிமென்ட் ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள், அலுமினிய உற்பத்தி ஆலைகள், மாக்னசைட், சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள், உலைக்கூட ஆலைகள், ரப்பர் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.
மேலும் பாதைகள் அமைக்கும் எஞ்சின்கள்,சைக்கிள்கள், தானியங்கி ஈரிருளிகள், தட்டச்சுப் பொறிகள், ஸ்விட்ச் கியர்கள், எலக்ட்ரிக் கேபிள்கள், மருத்துவ அறுவைச் சிகிச்சை கருவிகள், தொடர் வண்டிப் பெட்டிகள், பார உந்து வாகனங்கள் ஆகியன காமராஜர் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டவையாகும்.
இவைதவிர எண்ணூர் அனல் மின்சார நிலையம், தூத்துக்குடி துறைமுகம் போன்ற மிகப்பெரிய தொழில் திட்டங்களும் காமராஜர் ஆட்சிக் காலத்தில்தான் உருவாக்கப்பட்டன.
3. காமராஜர் சிந்தனைகள்

காமராஜரின் சீரிய சிந்தனைகள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெறியுடன் செம்மையாய் வாழ வழிவகுக்கும் வித்த்தில் அமைந்துள்ளன. அவரது சிந்தனையில் உதித்த சீரிய கருத்துக்களை இப்போது காண்போம்.
பொறுமையைக் கடைப்பிடியுங்கள்

இப்போதுள்ள அரசியல் தலைவர்கள் பலர் மக்களிடம் உங்களுக்கு நான் அதைச் செய்கிறேன், இதைச் செய்கிறேன் என்று சொல்லி தேவையில்லாத வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.
தேவையான செயல்களைக்கூட செய்ய மறுக்கிறார்கள். அவசரப்பட்டு சில செயல்களைச்செய்து அவமானத்திலும் அமுங்கிப் போகிறார்கள். அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலங்களாக சில அரசியல் தலைவர்கள் இருப்பது மிகவும் வருத்தமளிக்கும் விஷயமாகும்.
“பதறும் காரியம் சிதறும்” என்பார்கள். திட்டமிடாமல் அவசரப்பட்டு செய்யப்படும் செயல்கள் முடிவில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், மேலும் அவமானங்களை உருவாக்கும்.
இதனை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர் நிதானமாகச் செயல்படுவதற்கு எளிய வழியாக “ஆகட்டும் பார்க்கலாம்” என்னும் வார்த்தைகளை உபயோகித்து வந்தார்.
எந்தக் காலத்திலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது பெருந்தலைவரின் சிந்தனையாகும்.
காலம் தவறாமல் கடமை ஆற்றுங்கள்

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய முடியாமல் இருப்பவர்கள் பலர். பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி அரசியல் கூட்டங்களுக்குக் கூட சரியான நேரத்தில் வராத தலைவர்களும் உண்டு. கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்து இழுக்க முடியும் என்ற எண்ணத்தோடு கூட்டத்திற்கு வருபவர்களும் உண்டு.
கூட்டத்திற்கு தாமதமாக வந்தால்தான் “பெருந்தலைவராகத் தம்மைக் கருதுவார்கள் என பல அரசியல் தலைவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் உணரும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி காமராஜர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் நடந்தது.
சென்னையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கர்மவீர்ர் கலந்து கொண்டார் கூட்டத்தில் கலந்து கொள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறிப்பிட்ட நேரத்தில் அங்கு வரவில்லை. மிகவும் தாமதமாக வந்தார். நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வந்தவுடன் ரசிகர்கள் கூட்டத்திலிருந்து கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
இதனை மேடையிலிருந்த காமராஜர் கவனித்தார். சிவாஜி கணேசனை அருகில் அழைத்தார். “நீங்கள் கூட்டத்திற்கு வருவதாக இருந்தால் முதலிலேயே வந்து விடுங்கள். அல்லது கூட்டம் முடிந்தபின் வாருங்கள்.”
“இப்படி இடையில் வருவதை நிறுத்திவிடுங்கள்” என்றார் பெருந்தலைவரின் சீரிய சிந்தனை கலந்த அறிவுரையை ஏற்ற நடிகர் திலகம் அதன் பிறகு எல்லாக் கூட்டத்திற்கும் நேரம் தவறாமல் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல ஆரம்பித்தார்.
காலம் தவறாமல் கடமை செய்தால் உயர்வு அடையலாம் என்பது காமராஜர் வாக்கு.
வீண் வம்புக்கு விலகிவிடுங்கள்

நம்மீது குறை சொல்பவர்களைக் கண்டால் நமக்கு எரிச்சல் வரும். நம்மீது வேண்டுமென்றே குறை சொன்னால் எரிச்சலோடு கோபமும் சேர்ந்து வரும். சில வேளைகளில் மற்றவர்கள் வீண் வம்பு செய்து நம்மைச் சண்டைக்கு இழுப்பார்கள்.
இதனால் நிலைகுலைந்து நிதானம் இழந்து செயல்படவும் வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான காலகட்டங்களில் பிரச்சினை கொடுப்பவரை விட்டு விலகி இருப்பது விவேகமான செயல் ஆகும்.
வீணாக வம்புக்கு வந்தாலும் அவர்களோடு சண்டையிடாமல் ஒதுங்கிக் கொள்வது நல்லது.
இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்கள் தமிழக இளைஞர் காங்கிரஸின் தலைவராக இருந்த நேரம் கட்சியிலுள்ள மூத்த தலைவர்கள் பலர் குமரிஅனந்தன் அவர்களுக்கு உரிய மரியாதை தர வில்லை. பல்வேறு வித்த்திலும் அவரைத் தொந்தரவு செய்தார்கள்.
குமரி அனந்தன் சமாளித்துப் பார்த்தார். முடியவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றுவிட்ட குமரிஅனந்தன், முடிவில் பெருந்தலைவர் காமராஜரிடம் சொன்னார்: மூத்த தலைவர்கள் தனக்கு இடைஞ்சல் செய்கிறார்கள்” என்பதைச்சொன்னால் காமராஜர் கண்டிப்பாக அவர்களை அழைத்துக் கண்டித்து, திருத்துவார் என எதிர்பார்த்தார் குமரிஅனந்தன்.
காமராஜர் நீ போகிற இடத்தில் ஒரு பெரிய பாறை இருக்குதுன்னா என்ன செய்வே? அதை அசைத்து தள்ளி வச்சிட்டாப் போவே! இல்லைன்னா அதைச் சுற்றித்தானே போவாய். அதைப் போல் சுற்றிப்போயேன் என்று சொன்னார். பெருந்தலைவரின் சீரிய வழிகாட்டல் கேட்ட குமரி அனந்தன் அமைதியாகிவிட்டார்.
வீணாக வம்புச்சண்டைக்கு இழுப்பவர்களை விட்டு விலகிவிடு என்பது கர்மவீர்ர் காமராஜரின் அன்புக் கட்டளை ஆகும்.
படிக்கும் போது அரசியல் வேண்டாம்

அரசியல் என்பது அறிவுள்ளவர்களைக் கூட சில வேளைகளில் அழித்துவிடும். அதுவும் மாணவப் பருவத்தில் குறிப்பாக இளம்பருவத்தில் அரசியலில் மாணவர்கள் ஈடுபடும் போது உணர்ச்சிகள் மேலோங்கி இருப்பதால் படிப்பு பாழாக வாய்ப்புள்ளது. கவனம் சிதறிவிடுவதால் படிப்பில் அக்கறை இல்லாமல் கோஷ்டி சேர்ந்து படிப்பை நிறுத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
மாணவர்கள் தம்மோடு இருந்தால் அரசியலில் தனிபலம் கிடைக்கும் என்று இளம் இரத்தங்ளைத் தனது கட்சியின் வளர்ச்சிக்காக உரமாக்கிச் செயல்படுபவர்களும் உண்டு. ஆனால் காமராஜர் அரசியல் தலைவராக இருந்தாலும் மாணவர்கள் எப்போது அரசியலுக்கு வரவேண்டும் என்பதைத்தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார்.
ஒருமுறை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் அரசியலில் ஈடுபட்டுப் பிரச்சனைகளைச் சந்தித்திருந்தனர். அவர்கள் அப்போது முதலமைச்சராக இருந்த பெருந்தலைவர் காமராசரைக் காண்ச் சென்னை சென்றார்கள். அவர்களிடம் காமராஜர்.
படிக்கும்போது மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம்; படிப்பை முடித்த பின்பு எந்த அரசியலில் வேண்டுமானாலும் ஈடுபடுங்கள் என அவர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும் அவர்கள் பிரச்சனைக்குத்தீர்வு ஏற்பட உதவினார்.
படிக்கும்போது அரசியல் வேண்டாம் என்பது படிக்காத மேதையின் பண்புள்ள சிந்தனையாகும்.
எதிர்க்கட்சிகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்

எதிர்க்கட்சியா? அல்லது எதிரிக் கட்சியா? என்று சில ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரைப் பார்த்து அடிக்கடி கேட்பது உண்டு. ஏனென்றால் எடுத்ததுக் கெல்லாம் ஆளுங்கட்சியினரைக் குறைசொல்லும் போக்கு எதிர்க்கட்சிகளிடம் இருக்கிறது.
அதைப்போல ஆளுங்கட்சிக்காரர்களும் எதிர்க்கட்சிக்காரர்களை எவ்வாறு பிரச்சனைகளில் மாட்டி வைக்கலாம் என்று காத்து கிடப்பதும் உண்டு. ஆளும் கட்சியில் இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக எப்போதும் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து வைத்திருந்தார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தூய்மையான வாழ்க்கையை வாழ்ந்து எளிமையின் சின்னமாக விளங்கியவர். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது தனது தாயார் சிவகாமி அம்மையாரை விருதுநகரிலேயே தங்க வைத்திருந்தார்.
இதனைக் கவனித்த சில நண்பர்கள் “உங்கள் அம்மாவை சென்னைக்கு அழைத்து வந்து உங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாமே” எனக் கேட்டார்கள். உடனே காமராஜர் “இது நல்ல யோசனைதான் ஆனால் என் அம்மா என்னுடன் இருந்தால் அவர்களைப் பார்க்க நிறைய உறவினர்கள் வருவார்கள். இதைப்பார்க்கும் எதிர்க்கட்சியினர் காரியம் செய்து கொடுப்பதாகச் சொல்வார்கள். “ஆட்சிக்கே களங்கம் கற்பிப்பார்கள்” என்றார் காமராஜர்.
எதிர் கட்சியினரிடம் அதிக்க் கவனமாக இருக்க வேண்டும். என்பதை மிகத் துல்லியமாகச் சுட்டிக்காட்டியவர் காமராஜர்.
எதிர்க்கட்சிகளிடம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது காமராஜரின் பொன் மொழியாகும்.
உழைத்து வாழ வேண்டும்

இப்போதெல்லாம் உழைக்காமல் பிழைக்க வேண்டும் என்பதைச் சிலர் மனதில் கொண்டு சும்மா இருக்கிறார்கள். உடலுழைப்பு செய்யவும் தயாராக இல்லை. மூளை உழைப்புக்கும் தயாராக இல்லை. எனவே சோம்பலுடன் திரியும் கூட்டம் அதிகமாகிவிட்டது. ஒருநாடு வளர்ச்சிப் பெற வேண்டுமானால் அந்த நாட்டின் மக்கள் அனைவரும் உழைக்க வேண்டும்.
ஒருமுறை ஆவடியில் காங்கிரஸ் மாநாடு சிறப்பாக நடந்தது. மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொண்ட பெருந்தலைவர் காமராஜர் “கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும். சமதர்மச் சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.
காந்திஜி காட்டிய வழியில் சமதர்மச் சமுதாயத்தை அமைப்போம்” எனப்பேசி மக்களின் மனதில் இடம்பெற்றார்.
உழைத்து வாழ வேண்டும் என்பது உத்தமர் காமராஜரின் சத்திய மொழியாகும்.
வீரமுடன் வாழுங்கள்

“நோயினால் மடிந்தவர்களைவிட பயத்தினால் இறந்தவர்களே அதிகம்” என்பார்கள். எதற்கெடுத்தாலும் நாளும் பயந்து வாழுகின்ற மக்கள் உண்டு.

“அஞ்சி அஞ்சி சாவார் – அவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே”
என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் தெளிவாக நாட்டு மக்களின் நிலையை அன்றேபடம் பிடித்துக் காட்டினார். “கோழையாய் வாழ்வதைவிட வீரனாகச் சாவதே மேல்” என்பது நாட்டுப்பற்று மிக்க நல்லவர்களின் கருத்தாகும்.
நம் நாட்டு விடுதலைக்காகத் தூக்குக் கயிற்றை முத்தமிட்டவர்கள் ஏராளம். குண்டடிபட்டுச்செத்தவர்கள் ஏராளம். குண்டாந்தடியால் தாக்கப்பட்டவர்கள் ஏராளம். நாட்டுக்காக – விடுதலைக்காக, பாடுபட்ட நல்லவர்கள் வாழ்ந்த நம் நாட்டில், காமராஜர் வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் நடந்தது.
1949ஆம் ஆண்டு திருச்சியில் ஒருபொதுக்கூட்டம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது சிலர் குழப்பம் உண்டாக்க வெடிகளை வீசினார்கள்.
மேடை அருகே வெடி வெடித்ததும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.
உடனே காமராஜர் “கூட்டத்தில் குழப்பம் உண்டாக்க நினைப்பவர்கள் இது மாதிரி வெடிப்பதில் பலனில்லை. வீரமிருந்தால் என் நெஞ்சில் துப்பாக்கியால் சுடுங்கள். காந்தியடிகளைக் கோட்சே சுட்டுக் கொன்றான். அதனால் காந்தியடிகள் அமரரானார். அதைப் போலவே பெருமை எனக்கும் கிடைக்கட்டும். வீரப்பரம்பரையிலே வந்தவர்கள் வியாதியில் கஷ்டப்பட்டு இறந்தார்கள் என்பது பெருமை கிடையாது” என அஞ்சாது உரையாற்றினார். கூட்டம் அமைதியானது.
வீரமுடன் வாழ்வதே விவேகமான செயலாகும் என்பது “பாரதரத்னா” காமராஜரின் சீரிய சிந்தனையாகும்.
மக்களுக்கு முதல் மரியாதை செய்யுங்கள்.இன்று காமராஜரின் 109 வது பிறந்தநாள்

பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ அறைகளை பார்த்து பிரமிப்பு: நீதிபதி நெகிழ்ச்சி

:""பத்மநாப சுவாமி கோவில் பாதாள அறைகளை பார்வையிட்டு கணக்கெடுக்க சென்றபோது, நான் அங்கு பார்த்த காட்சி நம்ப முடியாத அனுபவமாகவும், கனவுலகம் போலவும் இருந்தது,'' என, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ்.ராஜன் தெரிவித்தார்.கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், உலக பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளை திறந்து அதில் கணக்கெடுத்து அறிக்கை சமர்பிக்குமாறு சுப்ரீம் கோர்ட், ஏழு பேர் கொண்ட உறுப்பினர்கள் அடங்கிய கமிட்டியை அமைத்தது. 
கோவிலுக்குள் இருந்த ஆறு பாதாள அறைகளில், ஐந்து அறைகளை அக்கமிட்டியினர் திறந்து பார்த்து கணக்கெடுப்பு நடத்தினர். 
 அக்கமிட்டியில் மன்னர் பரம்பரையைச் சேர்ந்தவரும், நீதிபதியுமான சி.எஸ்.ராஜன் மற்றும் எம்.என்.கிருஷ்ணன் ஆகியோரும் அடங்குவர்.

தான் பார்த்த காட்சிகள் குறித்து நீதிபதி ராஜன் கூறியதாவது:கோவிலுக்குள் பாதாள அறைகளுக்கு செல்லும் கதவை திறந்ததும், பார்ப்போரை பிரமிக்க வைக்கும் மிக பெரிய கருங்கற்கள் கொண்டு பாதை மறைக்கப்பட்டிருந்தது.அக்கருங்கற்களை மிகவும் பலசாலிகளான எட்டு பேர் கொண்ட குழு மிகவும் பாடுபட்டு அகற்றியது. கீழே அறைகள் மிகவும் சிறியதாக இருந்தன. கீழ்பகுதியில் நான்கைந்து பேர் மட்டுமே நிற்பதற்குரிய இடமே இருந்தது. அவ்வறைகளில் தேக்கினாலான நிறைய பெட்டிகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.அப்பெட்டிகளில் தான் தங்கம், வெள்ளி, ரத்தினம் மற்றும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பார்த்ததும் வியப்படைந்தேன். நம்ப முடியாத மாயலோகத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன். அங்கிருந்த விலை மதிக்க முடியாத பொக்கிஷங்கள் அனைத்தும் காலம் காலமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் பத்மநாப சுவாமிக்கு காணிக்கையாக அளித்து வந்துள்ளனர்.

அவற்றில் மன்னர்களது நண்பர்கள், பிற நாட்டு மன்னர்கள் வழங்கிய பொருட்களும் உள்ளன. ஒவ்வொரு முறை மன்னர் கோவிலுக்கு வரும்போதும், ஒரு தங்க நாணயத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்குவது வழக்கம். இவ்வாறு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தங்க நாணயங்களை சுவாதி திருநாள் மன்னர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.
இவ்வாறு அங்கு தங்க நாணயங்களே மிக பெரிய சேகரிப்பாக காணப்பட்டது. அவற்றில், "சூரத் நாணயம்' என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. பல சரித்திர நூல்களை ஆய்வு செய்த போது நேபாள மன்னர் குடும்பத்தினர் 100 ஆண்டுகளுக்கு முன் 25 ஆயிரம் சாளக்கிராம கற்களை திருவிதாங்கூர் மன்னருக்கு வழங்கி உள்ளது தெரிந்தது.

அவை நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து யானைகள் மீதேற்றி இரண்டரை ஆண்டுகள் கடந்து தான் திருவனந்தபுரத்திற்கு வந்து சேர்ந்தது. அவற்றில் 12 ஆயிரத்து 500 கற்களை கொண்டு தான் தற்போது கோவிலில் உள்ள மூலவர் சிலை உருவாக்கப்பட்டது. மீதமுள்ள கற்கள் பாதுகாப்பாக பத்ம தீர்த்தத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிந்தது.பாதாள அறைகளில் இருந்து கணக்கெடுக்கப்பட்டவை புதையலாக கருத முடியாது. புதையல் என்பதற்கு அரசின் விளக்கத்திலும் அவைகள் இடம் பெறாது. அவைகள் அனைத்தும் கோவில் சொத்தாகவே கருத முடியும். மேலும், பாதாள அறைகளில் இருப்பவை குறித்து கணக்கெடுக்க மட்டுமே சுப்ரீம் கோர்ட் கமிட்டியை நியமித்துள்ளது. அவற்றின் மதிப்பு குறித்து கணக்கெடுக்க அல்ல.இவ்வாறு ராஜன் கூறினார்.

கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிட தடைவிதிக்க கோரி மனு தாக்கல் : திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் பாதாள அறைகளில் இருந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி நடந்து வரும் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க கோரி, திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள கோவில் சொத்து விவரங்களை பல்வேறு தொலைக்காட்சி, நாளிதழ்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது. கணக்கெடுப்பு குறித்து உண்மையான விவரங்களை கமிட்டி தான் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிட்டால் மட்டுமே பொக்கிஷங்கள் குறித்த உண்மை தகவல் பொதுமக்களுக்கு கிடைக்கும்.
கோவில் சொத்துக்கள் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் தடையாணை கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். வழக்கு விசாரணையில் தன்னையும் சேர்க்க கோரி மூலம் திருநாள் ராமவர்மா மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.இம்மனு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிகிறது.


நன்றி :தினமலர் 06 /07 /2011

சுவாமி விவேகானந்தர்-வரலாற்று நாயகர்


வணக்கம் நண்பர்களே இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு  தினம்.  சுவாமி விவேகானந்தரை வணங்கி இந்த தினத்திலே சுவாமியின் வாழ்க்கை வரலாற்றை தெரிந்துகொள்வோம்.


1893 ஆம் ஆண்டு செப்டம்பர்  11 ந்தேதி இடம் அமெரிக்காவின் சிக்காகோ மாநிலம் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக  பல்வேறு நாடுகளிலிருந்து பல சமயங்களை சேர்ந்த பேச்சாளர்கள் கூடியிருந்தனர். மிடுக்காக உடையணிந்த மேற்கத்திய மத போதகர்கள் லேடீஸ் & ஜெண்டில்மேன் என்று தொடங்கி தங்கள் சொற்பொழிவை ஆற்றினர். 

இந்தியாவை பிரதிநிதித்து ஒருவர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார் அவரது முறை வந்ததும் பேசுவதற்கு மேடை ஏறினார் தனக்கு முன் பேசியவர்கள் போல மிடுக்கான கோட் சூட் உடைகளைப்போல் அல்லாமல் காவி உடையும் தலைப்பாகயும் அணிந்திருந்த அவரை பார்த்தவுடன் அரங்கத்தில் லேசான சலசலப்பும் சிரிப்பும் பரவியது. சிலர் கேலியுடன் பார்த்தனர் வேறு சிலர் இவர் என்ன பேசப் போகிறார் என்று கொட்டாவி விட்டனர்.இன்னும் சிலர் பக்கத்தி இருந்தவரிடம் பேசத் தொடங்கினர்.

அந்த அலட்சியத்தையெல்லாம் பொருட்படுத்தாமல் அமைதியாக சிறிது நேரம் அனைவரையும் பார்த்த பிறகு சகோதர சகோதரிகளே என்று தனது சொற்பொழிவை தொடங்கினார் அவர். கூட்டத்தினரை அவ்வாறு அழைத்த விதத்திலேயே அரங்கத்தில் உள்ள அனைவரின் கவணமும் அவர்மீது திரும்பியது சிறிது மவுனம் காத்த பிறகு தனது பேச்சை தொடர்ந்தார். அவர் பேசி முடித்தபோது அரங்கம் வியப்போடு கைதட்டி அவருக்கு மரியாதை செய்த்தது. அவரது ஆடையிலிருந்த வித்தியாசத்தை மறந்து அவரின் பேச்சிலிருந்த உயந்த கருத்துக்களை நினைத்து மகிழ்ந்தது.

இந்தியா இந்துமதம் ஆகியவைபற்றிய விழிப்புணர்வை  ஏற்படுத்தும் கருத்துக்களை அந்த அந்நிய மேடையில் அழகாக முழங்கி மேற்கத்திய உலகில் மரியாதையைப் பெற்ற அந்த வரலாற்று நாயகர்தான் சுவாமி விவேகானந்தர். செல்வ செழிப்பில் பிறந்தும் துறவரம் பூண்டு நவீன இந்தியாவுக்கு நல்வழிகாட்டிய அந்த அரிய மாமனிதரின் கதையை தெரிந்துகொள்வோம்.

1863 ஆம் ஆண்டு சனவரி 12 ந்தேதி கல்கத்தாவில் புகழ்பெற்ற டார்டா குடும்பத்தில் உதித்தார் நரேந்திர நாதர் அதுதான் விவேகானந்தரின் இயர்பெயர். தந்தை விஸ்வநாதர் தாயார் புவனேஸ்வரி தேவி செல்வந்தர்களாகவும் அதே நேரத்தில் மக்களின் மரியாதை பெற்றவர்களாகவும் இருந்தனர். ஆங்கிலம் மற்றும் பெர்ஸிய மொழிகளில் புலமைப் பெற்றிருந்த தந்தை  கல்காத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். மிகவும் கருணை உள்ளம் படைத்தவர் அவர். தாய் புவனேஸ்வரி தேவி ராமாயணத்திலும் மகாபாரத்திலும் புலமைப் பெற்றிருந்தார்.

தினசரி நரேந்தி நாதருக்கு அவர் ராமாயண, மகாபாரதக் கதைகளை சொல்வார்  ராமர் கதாபாத்திரின் மீது மரியாதை தோன்றி ராமரை வணங்க தொடங்கினார் நரேந்திர நாதர் போகப் போக தியானத்தில் மூழ்க தொடங்கினார் சில நேரங்களில் உறவினர்கள் அவரது உடலை குலுக்கி அவரை சுய நினைவுக்கு கொண்டு வரவேண்டியிருந்தது. சிறுவயதிலேயிருந்து எல்லாவற்றையும் ஆராய்ந்து அறியும் குணம் அவருக்கு இருந்தது. பின்னாளில் அவர் ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் சீடராக சேர்ந்தார்.

மற்ற சீடர்களிலிருந்து வேறுபட்டு விவேகமிக்கவராக திகழ்ந்ததால் நரேந்திர நாதருக்கு விவேகானந்தர் என்ற பெயரை சூட்டினார்  ராமகிருஷ்ண பரமஹம்சர். அன்றிலிருந்து அந்த பெயரிலேயே அழைக்கப்பட்டார். யோகாசனத்தை முழுமையாக கற்று வேதாந்தங்களை கற்பிக்க தொடங்கினார் விவேகானந்தர். காசி லக்னோ ஆக்ரா பிருந்தாவனம் ரிஷிகேஸ் என இந்தியாவின் எல்லா பகுதிக்கும் யாத்திரை மேற்கொண்டார். சுமார் 14 ஆண்டுகள் பசிக்கொடுமையை உணர்ந்து அடுத்த வேளை என்ன சாப்பிடுவது எங்கு உறங்குவது என தெரியாமல் கடுமையான துறவு வாழ்க்கையை மேர்கொண்டார்.
அவர் இராமேஸ்வரத்துக்கு யாத்திரை மேற்கொண்டபோது இராமநாதபுரத்தின் மன்னனாக இருந்த பாஸ்கர சேதுபதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. சொற்பொழிவாற்றுவதில் வல்லவரான அவருக்கு சிக்காகோவில் நடைபெற இருந்த உலக ஆன்மீக மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு வந்திருந்தது.  விவேகானந்தரின் விவேகத்தை உணர்ந்திருந்த மன்னர் அந்த மாநாட்டில் பேச தம்மைவிட விவேகானந்தரே சிறந்தவர் என முடிவு செய்தார். அவரது வேண்டுகோளை ஏற்று சிக்காகோ சென்றபோதுதான் அந்த புகழ்பெற்ற சொற்பொழிவை ஆற்றினார் விவேகானந்தர்.

செப்டம்பர் 11 ந்தேதிக்கு பிறகு மேலும் மூன்று நாட்கள் அவரது சொற்பொழிவுகளில் மயங்கினர் மேற்கத்தியர்கள். அளவுக்கு மீறிய மதபற்று மூடத்தனமான பக்தி இவற்றிலிருந்து தோன்றிய மத வெறியால் உலகம் வன்முறையிலும் ரத்தக்களரியிலும் மிதக்கிறது. அதனால் நாகரிகம் அழிந்து எத்தனையோ சமுதாயங்கள் நம்பிக்கை இழந்துவிட்டன என்று முழங்கினார் விவேகானந்தர். அவரது பேச்சையும் அதிசயித்த ஒரு பெண் விவேகானந்தர் சென்ற இடமெல்லாம் பின் தொடர்ந்தார் அவரை தனிமையில் சந்திக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார்.

அயோவா, சென்லுயி, டெட்ராயிட், பாஸ்டன், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன் நியூ யார்க் ஆகிய இடங்களில் விவேகானந்தருக்கு பேச அழைப்பு வந்தது. அவரும் சென்று பேசினார் அந்த இடங்களிளெல்லாம் அந்த பெண் பின்தொடர்ந்தார் கடைசியாக அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமெரிக்க இளையர்கள் பலர் என் அழகில் மயங்கி என்னை சுற்றுகிறார்கள் ஆனால் நான் உங்கள் அறிவில் மயங்கி உங்களைச் சுற்றி வருகிறேன். என்னுடைய அழகும் உங்களுடைய அறிவும் சேர்ந்தால் நன்றாக இருக்குமே நாம் திருமணம் செய்துகொண்டால் என் அழகோடும் உங்கள் அறிவோடும் குழந்தை பிறக்கும் என்று கூறினார் அந்த 20 வயதுப் பெண். அப்போதுதான் 30 வயதைத் தொட்டிருந்த விவேகானந்தர் என்ன பதில் சொன்னார் தெரியுமா??

தாயே எனக்கு வயது 30 உங்களுக்கு 20 இருக்கும் நாம் திருமணம் செய்து நமக்கு பிறக்கும் குழந்தை அறிவுமிக்கதாக இருக்குமென்பதற்கு உத்தரவாதம் இல்லை. அதற்கு பதிலாக நீங்கள் என்னையே மகனாக ஏற்றுக் கொள்ளலாமே என்றார்.அந்த பதிலை கேட்டு ஸ்தம்பித்துபோனார் அந்தப் பெண் அப்படி காண்கின்ற பெண்களையெல்லாம் தாயாக கருதியவர் விவேகானந்தர். சிக்காகோ சொற்பொழிவுகளை முடித்துகொண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விட்டு 1897 ஆம் ஆண்டு ராமேஸ்வரம் திரும்பினார் விவேகானந்தர்.

உலகம் முழுவதும் இந்தியாவின் சிறப்பையும் இந்துமதத்தின் கூறுகளையும் முழங்கி வந்த விவேகானந்தர் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ந்தேதி தமது 39 வயதில் காலமானார். கண்ணியாகுமரியில் விவேகானந்தர் தியானம் செய்த இடம்  “விவேகானந்தர் பாறை” என்று அழைக்கப்படுகிறது. கிழக்கத்திய மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றிய ஆழமான அறிவு ஆன்மீக ஞானம், பேச்சாற்றல் இவைதான் விவேகானந்தரின் அடையாளங்கள். இந்தியாவில் மட்டுமல்ல மேற்கிலும் நிலவிய வறுமையை கண்டு மனம் பதைத்தவர்.

இந்தியாவின் சிறப்பு, மூடத்தனத்தின் ஒழிப்பு பகுத்தறிவின் முக்கியத்துவம் கல்வியின் அவசியம், ஏழ்மையின் கொடுமை என பல்வேறு பொருள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவுகளை அவர் நிகழ்த்தியிருக்கிறார். 1897 ஆம் ஆண்டில் இராமகிருஷ்ண மிஷன் என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

எந்தவிதமான பிரச்சினைகளையும் சந்திக்கும் வலிமை உங்களுக்கு உண்டா உங்கள் அன்புக்குரியவர்கள் எதிர்த்தாலும் உங்கள் இலக்குகளை அடையும் விடாமுயற்சி உண்டா தன்னம்பிக்கை இருந்தால்தான் நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியும் உடலை திடமாக வைத்திருக்க வேண்டும் அதோடு கற்பதன் மூலமும் தியானத்தின் மூலமும் நீங்க வெற்றியடையலாம் என்கிறார் விவேகானந்தர்.

நமது தேசத்தின் சில அவலங்களை படித்து பாருங்கள் !


* அரிசியின் விலை கிலோ 44 ரூபாய் . ஆனால் சிம் கார்டு இலவசமாக கிடைக்கிறது .
*பொது விநியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய் .ஆனால் பொதுக் கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய் .
* வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி ஐந்து சதவீதம் .ஆனால் கல்விக் கடன்களுக்கான வட்டி 12 சதவீதம் .
*பிஸ்ஸா வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில் பாதியளவு வேகதில்கூட ,அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும் ,தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை .
*ஒரு கிரிக்கெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விலைக்கு வாங்ககூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள் .அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட அரபணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை .
*நாம் அணியும் உள்ளாடைகளும் ,ஆடைகளும் ,காலணிகளும் ,குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன .ஆனால் நாம் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன .
*நாம் குடிக்கும் லெமன் ஜூஸ்கள் செயற்கையான ரசாயன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன .பாத்திரம் கழுவ உதவும் நீர்க்கலவை இயற்கையான லெமனில் தயாரிக்கப்படுகிறது .
*மொத்தமாக பள்ளிகளையும் ,கல்லூரிகளையும் நடத்தவேண்டிய அரசு சாராயம் விற்றுகொண்டிருக்கிறது .சாராயம் விற்றுகொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை நடத்திக்கொண்டிருக்கின்றனர் .
*கோதுமைக்கு வரியில்லை .அது விலைபொருள் .கோதுமையை மாவாக திரித்தால் வரி உண்டு .கோதுமை மாவை சப்பாத்தியாக செய்தால் வரியில்லை .அதே மாவை பிஸ்கட் கேக் பிரெட்டாக செய்து விற்றால் வரி உண்டு.
*பிரபலமாக வேண்டும் என்ற பிலாசைகள் அனைவருக்கும் உண்டு. அனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பமில்லை .
*குழந்தை தொழிலார்களை ஒழிக்க வேண்டும் என்போம் .அனால் தேநீர்க்கடைகளில் வேலைப் பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக் குடிப்போம் .
இந்த நிலை மாறுவது எப்போது ?
பாரத மாதாவைத்தான் கேட்க வேண்டும்.

நன்றி - விஜயபாரதம் வார இதழ் 14.01.2011