உலகம் போற்றும் உன்னதம் :நளந்தா பல்கலைக்கழகம்

உலகத்துக்கே அறிவொளி வழங்கிய முதல் நாடு இந்தியா என்பதற்கு ஒரே ஆதாரம் நளந்தா பல்கலைக்கழகம். நளந்தா என்றால், "குறைவற்ற கொடை' என்று அர்த்தம். கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகள் முன்பே செம்மையாக இயங்கி வந்த இந்த பல்கலை, பிஹார் தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தென்கிழக்கே அமைந்துள்ளது. உலக வரலாற்றின் முதல் பல்கலைக்கழங்களில் ஒன்றாக, நளந்தா இருந்துள்ளது.


இதில் உள்ள சில கட்டடங்கள் குப்த மன்னர்களாலும், மவுரியப் பேரரசர்களாலும் கட்டப்பட்டவை. கி.மு., 415 - 55ல் இருந்த மன்னர் சக்ராதித்யா என்ற குமாரகுப்தா தான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் என, யுவான்சுவாங் உள்ளிட்ட வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அடுத்தடுத்த மன்னர்கள், நளந்தா பல்கலைக்கழகத்தை மெருகேற்றினர். வெறும் செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் மிச்சங்கள், இன்று 10 சதுர கி.மீ., அளவுக்கு பரந்திருக்கின்றன. ஒரு சதுர கி.மீ., தான் அகழ்வாராய்ச்சிக்கே உட்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்திலேயே இந்த பல்கலைக்கழகத்தில் படிக்க கொரியா, ஜப்பான், சீனா, திபெத், இந்தோனேஷியா, கிரீஸ், துருக்கி மற்றும் பெர்சியா போன்ற நாடுகளில் இருந்து மாணவர்கள் வந்திருக்கின்றனர். மொத்தம் 10 ஆயிரம் பேர் படித்த இந்த பல்கலைக்கழகத்தில், 2,000 பேராசிரியர்கள் பணிபுரிந்துள்ளனர். சிங்கிள் பெட்ரூம், டபுள் பெட்ரூம் என 11 ஆயிரத்து 500 அறைகளுடன் 11 ஹாஸ்டல்கள் இருந்தன. ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்த பல்கலைக்கழகமும், மதில் போன்ற மிகப்பெரிய சுவரால் சூழப்பட்டிருந்தது. நான்கு நுழைவாயில்கள் இருந்தன. அவற்றில் உள்ள வாட்ச்மேன்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் தான், உள்ளே நுழையவே அனுமதிப்பராம். உள்ளே, எட்டு தனித்தனி காம்பவுண்டுகளும், 10 கோவில்களும், ஏராளமான தியான அறைகளும், 30 மாணவர்கள் அமரும் வகையில் வகுப்பறைகளும், கூட்ட அரங்குகளும் இருந்துள்ளன. எல்லாமே செங்கல் சுவர்கள் தான். செங்கற்களின் உயரம் ஒரே மாதிரி இருந்தது. நீளம் வேறு வேறு அளவுகளில் இருந்தது. சுண்ணாம்பு, செங்கல் தூள், வெல்லம், வில்வ பழம், உளுத்தம் பருப்பு ஆகியவற்றைக் கொண்டு செங்கற்கள் ஒட்டப்பட்டிருந்தன. பேராசிரியர்கள் வந்து செல்வதற்கு தனி நடைமேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மூன்று முதல் 12 அடி அகலத்துக்கு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம், அந்த அறைகள், இயற்கையாகவே குளுமை கொண்டிருந்தன. காற்றோட்டத்துடன் கூடிய குளியலறைகளும் உண்டு. மதில் சுவரின் வெளியே பெரிய பெரிய ஏரிகளும், பூங்காக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
"தர்மத்தின் புதையல்' என்ற பெயரில் அங்கிருந்த நூலகம், ஒன்பது மாடி கொண்ட மூன்று கட்டடங்களில் இயங்கியது (50 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட சென்னை எல்.ஐ.சி., கட்டடம் 14 மாடி). பல்கலைக்கழகத்தில் புத்தமத, இந்து மத புனித நூல்கள், பகுத்தறிவு பாடங்கள், வெளிநாட்டு, உள்நாட்டு படிப்புகள் சொல்லித் தரப்பட்டன. அறிவியல், வானியல், மருத்துவம் மற்றும் தத்துவவியல், தர்க்கவியல், மனோதத்துவவியல், சாங்க்யம், யோக சாஸ்திரம், வேதங்களும் பாடத்திட்டத்தில் இருந்தன. சீரும் சிறப்புமாக இருந்த பல்கலைக்கழகம், இந்தியாவின் பெரும்பான்மையான சரித்திரச் சிறப்புகள் சீரழிக்கப்பட்டதைப் போலவே, துருக்கியைச் சேர்ந்த முஸ்லிம் மன்னர் பக்தியர் கில்ஜியின் படையால் (கி.மு., 1193) சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டது.
பெர்சியன் வரலாற்று ஆய்வாளர் மின்ஹஜ்-இ-சிரஜ் வார்த்தைகளில் சொல்வதானால், வாளின் முனையில் புத்த மதத்தை வேரறுத்து, இஸ்லாமியத்தை நிறுவும் முயற்சியாக, ஆயிரக்கணக்கான புத்த பிட்சுக்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர்; ஆயிரக்கணக்கான பிட்சுக்கள் தலை துண்டிக்கப்பட்டனர். அங்கிருந்த நூலகத்தை எரித்த போது, ஆறு மாதங்களுக்கு புகை நீடித்ததாக வரலாறு பதிவு செய்கிறது; அத்தனை லட்சக்கணக்கான அரிய நூல்கள் அங்கு இருந்துள்ளன. அந்த இடத்தில், ஒரு சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவ வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கனவு கண்டார். அதை நனவாக்கும் முயற்சியில், ஜப்பான், சீனா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. மொத்தத் திட்டச் செலவு 500 கோடி ரூபாய். அதில் 250 கோடி கட்டுமானப் பணிகளுக்கும், 250 கோடி ரூபாய் இதர அடிப்படை வசதிகளுக்கும் செலவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டில் இருந்தே இந்த திட்டம் பேசப்பட்டு வருகிறது. இன்னமும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை. ராஜ்கிர் செல்லும் வழியில் பில்கி - மகதேவா என்ற இடத்தில் கையகப்படுத்தப்பட்ட நிலம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை வெறும் முட்புதராகக் காட்சியளிக்கிறது. பல்கலைக்கழக திட்டக் குழுவில் இருந்து தலாய் லாமாவை நீக்கியது தான் மிச்சம். சீனாவின் கைங்கர்யம். "ஓபனிங்' எல்லாம் நல்லா தான் இருக்கு... "பினிஷிங்' சரியில்லையேப்பா...' என்ற கதையாகாமல் இருந்தால் சரி!
நன்றி:தினமலர் 07 10 2010