உலகக் கோப்பையில் சாதிப்பார் அஸ்வின்!

உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு இடம் கிடைத்துள்ளது என்றால், அது சாதாரண விஷயமில்லை.

தேவையான நேரத்தில், தேவையான ஒற்றை வார்த்தையை பயண்படுத்தினால் அது எந்த அளவுக்கு மாற்றம் ஏற்படும் என்பதில் அஸ்வினே ஒரு முன் உதாரணம்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் போதுமான அளவுக்கு இடம்பெறாவிட்டாலும், இருபது ஓவர் போட்டியில் அஸ்வின் சாதித்த அந்த ஒரு ஆட்டம் தான் இன்று இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பாக அமைந்துவிட்டது.

அப்படி என்ன ஒரு வார்த்தை அஸ்வின் உதிர்த்தார் என்பது தானே உங்கள் கேள்வி? அது 'நான் பந்து வீசுகிறேன்' என்பது மட்டுமே.

ஐபிஎல் 3-ல் சாம்பியம் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அடுத்து பங்கேற்ற சாம்பியன் லீக்கில் தான் அஸ்வின் இந்த வார்த்தை கூறியுள்ளார். இத்தொடரில் விக்டோரியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு அணிகளும் சம எண்ணிக்கையில் ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டையில் முடிந்தது. இருபது ஓவர் போட்டியில் ஆட்டம் டையானால் சூப்பர் ஓவர் வைத்து அதில் யார் அதிகம் ரன் அடிக்கிறார்களோ அவர்களே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர்.

அந்த வகையில் விக்டோரியா அணி முதலில் சூப்பர் ஓவரை விளையாட அனுமதிக்கப்பட்டது. விவகாரமே இங்குதான் ஆரம்பமானது. அதிக பணம் கொடுத்து வாங்கப்பட்ட வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களான போலிங்கர், கெம்ப் ஆகியோர் அமைதி காக்க, சூழற் பந்து வீச்சாளார்களில் முரளிதரன் யோசிக்க, அந்த ஒரு தருணத்தில் 'நான் பந்து வீசுகிறேன்' என்று முன் வந்தார் அஸ்வின். இதை சற்றும் எதிர்பாராத கேப்டன் தோனி அஸ்வினையே பந்து வீச அனுமதித்தார்.

இந்த துணிச்சல் போதாதா இந்திய அணிக்கு? அந்தப் போட்டியில் சென்னை அணி தோற்றாலும் அஸ்வீனின் மன உறுதிக்கு தோனி சில வாய்ப்புகள் வழங்கினார். அதில் அஸ்வின் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் தான் நல்ல ஒரு பந்து வீச்சாளர் என்பதை நிருபித்தார்.

அதிலும் டெஸ்ட் போட்டியில் நிரந்திரமாக விளையாடி வந்த பிரஜன் ஓஜாவை பின்னுக்கு தள்ளிவிட்டு அஸ்வின் உலகக் கோப்பை அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது முக்கிய காரணமே  அஸ்வினின் விதவிதமான பந்து வீச்சே.கேரம், ஆப் ஸ்பின், கூக்ளி என பந்தை லாவகமாக கையாளுகிறார். அதுவும் சமீப காலத்தில் இலங்கை வீரர் மேண்டிஸுக்கு படு போட்டியாக உருவாகிவிட்டார்.

இந்திய ஆடுகளங்கள் அனைத்தும் சூழற் பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் பகுதி நேர சூழற்பந்து வீச்சாளார் இருந்தும் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பலருக்கு அஸ்வின் ஒரு பந்து வீச்சாளராக தெரிந்தாலும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்பது பலருக்கு தெரியவில்லை.

7 ஒரு நாள் போட்டியில் பங்கேற்று 14 விக்கெட்களை கைப்பற்றியுள்ள அஸ்வின், இந்த உலகக் கோப்பையிலும் சாதிப்பார் என்று தேர்வாளார்கள் முடிவே இந்த வாய்ப்புக்கு இன்னொரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

தேர்வாளர்களின் தேர்வை தமிழக வீரர் அஸ்வின் நியாயப்படுத்த கடுமையாக போராடுவார் என்பது மட்டும் நிச்சயம். மொத்தத்தில் இளைஞர்களுக்கு ரோல் மாடலாக உறுவாகியுள்ள அஸ்வின் இந்த உலகக் கோப்பையில் சாதிப்பார் என எதிர்பார்க்கலாம்.
நன்றி: விகடன்.காம்