ஊழலின் சிகரம் தொட்ட தி.மு.க.

2 ஜி அலைக்கற்றை ஊழல் குறித்து விசாரணை நடத்தி வரும் உச்ச நீதிமன்றம் இதுவரை வரலாறு காணாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
இந்தியாவின் தலையாய குற்றப் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் நடவடிக்கைகளில் தனது அதிருப்தியை வெளிப்படையாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
அலைக்கற்றை ஊழல் குறித்து கடந்த 16 மாதங்களுக்கு மேலாக விசாரணை நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையையும் சம்பந்தப்பட்ட அமைச்சர் மீதோ, அதிகாரிகள் மீதோ இதுவரை எடுக்காதது ஏன் - என்ற கேள்வியை முதலில் எழுப்பியது. இவ்வாறு செய்யவிடாமல் சி.பி.ஐ.யைத் தடுத்தது யார் - என்றும் கேட்டுள்ளது. இந்தக் கேள்விகளுக்கு வெளிப்படையான பதில் எதையும் சி.பி.ஐ.யால் தெரிவிக்க முடியவில்லை.
இறுதியாக 16-12-10 அன்று உச்ச நீதிமன்றம் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டது. உச்ச நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தவேண்டும். 2001-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை விசாரணை நடத்த வேண்டும். அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? தகுதியில்லாத நிறுவனங்களுக்கு உரிமைகொடுக்கப்பட்டதன் பின்னணி என்ன என்பனவற்றையும் தீவிரமாக ஆராய்ந்து கண்டறிய வேண்டும். 2ஜி அலைக்கற்றை அனுமதி குறித்த அறிவிப்பு 19-10-2007-ல் வெளியான நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாகவே சில நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்தும், அலைக்கற்றை ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற ஊகத்தின் அடிப்படையில் பல நிறுவனங்களுக்கு அரசுத்துறை வங்கிகள் பெருமளவில் கடன் வழங்கியுள்ளது குறித்தும் விசாரிக்க வேண்டும். எத்தகைய நபரும், அவர் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அவரோ அல்லது ஏதாவதொரு அமைப்போ விசாரணையில் தலையிட சி.பி.ஐ. இடம் கொடுக்கக்கூடாது.
மேற்கண்ட ஆணைகளைப் பிறப்பித்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 10-ம் தேதிக்குள் இறுதி அறிக்கையை அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணை, சி.பி.ஐ.யின் செயல்பாடுகளில் திருப்தியில்லாததால் பிறப்பிக்கப்பட்ட ஆணை மட்டுமல்ல, மத்திய அரசின் செயல்பாடுகளுக்குச் சாட்டையடி கொடுத்த ஆணையுமாகும்.
சி.பி.ஐ. அமைப்பு மத்திய உள்துறை அமைச்சரான ப. சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகும். 16 மாதங்களாக சி.பி.ஐ. சரிவர விசாரணை நடத்தவில்லை என்றால் அதற்குத் தடையாக இருந்தது யார் - என்ற கேள்விக்கு நேரடியாக உள்துறை அமைச்சரே பதில்கூறக் கடமைப்பட்டவர். அது மட்டுமல்ல, அவர் கண்காணிப்பில் சி.பி.ஐ. இயங்குவதிலிருந்து மாற்றி நேரடியாக தனது கண்காணிப்புக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத ஒன்றாகும்.
உள்துறை அமைச்சர் மீது மட்டுமல்ல, பிரதமர் மீதும் உச்ச நீதிமன்றம் நேரடியாகக் குற்றம் சாட்டவில்லையே தவிர, அதன் ஆணைகளின் பொருள் அதுதான். இந்த ஆணை வெளிவந்தவுடனேயே பிரதமர், உள்துறை அமைச்சரைப் பதவிநீக்கம் செய்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் சி.பி.ஐ.யைத் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டு உச்ச நீதிமன்றத்திடம் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும்.
சி.பி.ஐ. விசாரணை என்பது மதிப்பிழந்துபோய் நீண்டகாலமாகிவிட்டது. அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், அச்சமூட்டிப் பணியவைக்கவும் ஆளுங்கட்சியினரால் பயன்படுத்தப்படும் ஓர் அமைப்பாகத்தான் சி.பி.ஐ. இயங்கி வருகிறது. நேர்மையும் துணிவும் நிறைந்த அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இருந்தபோது, சில நடவடிக்கைகள் ஒழுங்கானமுறையில் எடுக்கப்பட்டுள்ளன.
1994-ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த சுக்ராம் என்பவர் "அட்வான்ஸ்டு ரேடியோ மாஸ்ட்' என்ற நிறுவனத்துக்கு,ரூ. 1.68 கோடிக்கு அனுமதி அளித்துச் சலுகைகாட்டினார். இதன்மீது புகார்கள் எழுப்பப்பட்டபோதிலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கியமானவராக இருந்ததால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 1995-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ.யின் இயக்குநராக ஜோகிந்தர் சிங் பொறுப்பேற்றார். அப்போது இது சம்பந்தமான கோப்புகளை அவர் ஆராய்ந்தபோது, சுக்ராம் தவறான முறையில் செயல்பட்டுள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தன. எனவே, அப்போது பிரதமராக இருந்த தேவகவுடாவின் கவனத்துக்கு அவர் இதை எடுத்துச் சென்றார். ஜனதா கட்சியைச் சேர்ந்த தேவகவுடா காங்கிரஸ் ஆதரவுடன் பதவியில் இருந்தபோதிலும் மேற்கொண்டு நடவடிக்கைகளைத் தொடர்வதற்கும், வழக்குத் தொடுப்பதற்கும் அனுமதி கொடுத்தார். அதற்கிணங்க தில்லியில் இருந்த முன்னாள் அமைச்சர் சுக்ராம் வீட்டில் 2.45 கோடி ரூபாய்களும், மண்டி என்ற ஊரில் இருந்த அவரது வீட்டில் 1.6 கோடி ரூபாய்களும் ஆக 4.05 கோடி ரூபாய்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் சுக்ராம் லண்டனுக்குத் தப்பிச் சென்றுவிட்டார். ஆனாலும் 48 மணிநேரத்தில் அவர் நாடு திரும்பாவிட்டால் அவரது கடவுச் சீட்டு ரத்து செய்யப்படும் என சி.பி.ஐ. எச்சரித்தது. அதற்குப்பிறகே அவர் நாடு திரும்பினார். அவர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆனால் அதே தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த ஆ. ராசா கையாண்ட முறைகளின் விளைவாக மத்திய அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட பிறகும், அதைப் பொதுக்கணக்குத்துறை சுட்டிக்காட்டிய பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன்வரவில்லை. நாடாளுமன்றத்தில் இப் பிரச்னையை எதிர்க்கட்சிகள் எழுப்பி, நாடாளுமன்றத்தை முடக்கியபிறகும் பிரதமர் அசையவில்லை. உச்ச நீதிமன்றத்தில் சில தன்னார்வ நிறுவனங்களும் சுப்பிரமணியன் சுவாமியும் வழக்குகள் தொடுத்தபிறகு உச்ச நீதிமன்றம் இப் பிரச்னையைத் தனது கையில் எடுத்துக்கொண்டு கடும் கண்டனம் தெரிவித்தது.
2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதை சில நாள்களுக்கு ஒத்திவைக்குமாறு அமைச்சர் ராசாவுக்குப் பிரதமர் கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தை ராசா அலட்சியப்படுத்தியதோடு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, அட்டார்னி ஜெனரலின் ஆலோசனையும் பெறவேண்டும் என சட்ட அமைச்சகம் தெரிவித்த கருத்து தொடர்பாகப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், "நியாயமற்றது, பாரபட்சமானது, தன்னிச்சையானது' என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்தி பிரதமருக்குக் கடிதம் எழுதியதன் மூலம் பிரதமரையே ராசா அவமதித்திருக்கிறார் என்று உச்ச நீதிமன்றம் பகிரங்கமாகக் கண்டித்தது.
ஆனால், தன்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்ட ராசா மீது எத்தகைய நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் பிரதமர் பதுங்கிக்கொண்டது ஏன்? பிரதமருக்கும் மேலான சக்திகள் ராசாவுக்கு ஆதரவாகத் தலையிட்டனவா? பிரதமரையே அலட்சியம் செய்யும் துணிவு ராசாவுக்கு வந்த பின்னணி என்ன? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
2 ஜி அலைக்கற்றையை அடிமாட்டு விலையில் பெற்ற 122 நிறுவனங்களில் 85 நிறுவனங்கள் வெறும் பெயர்ப்பலகை மட்டுமே வைத்திருந்த போலி நிறுவனங்கள் ஆகும். அலைக்கற்றை உரிமத்தை வாங்கும் நிறுவனம் அதை மூன்றாண்டுகளுக்கு யாருக்கும் விற்கக்கூடாது என்பது தொலைத்தொடர்புத்துறை விதித்த நிபந்தனையாகும். அந்த நிபந்தனைகளை இந்த நிறுவனங்கள் தூக்கியெறிந்துவிட்டு, தங்கள் பங்குகளில் 45 முதல் 60 சதவீதம் வரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று, பல ஆயிரம் கோடிகளை ஆதாயமாக அடைந்தன. இந்த விதிமீறல்களைப் பார்த்தும் பார்க்காததுபோல தொலைத்தொடர்புத்துறை கண்ணை மூடிக்கொண்டது ஏன்?
அமைச்சர் ராசா பதவி விலகியபிறகு, அந்தப் பொறுப்பை ஏற்ற கபில்சிபல் அந்தத்துறையில் ராசாவின் வலதுகரமாகத் திகழ்ந்த அதிகாரிகளை - சந்தோலியா, ஏ.கே. ஸ்ரீவஸ்தவா ஆகியோரையும் சட்ட ஆலோசகரான சந்தோக்சிங் என்பவரையும் உடனடியாக தொலைத்தொடர்புத் துறையிலிருந்து தூக்கியடித்தது ஏன்? ராசாவின் ஊழல்களுக்கு இவர்கள் துணையாக இருந்தார்கள் என்பதுதானே இந்த நடவடிக்கைக்குப் பொருளாகும். இவ்வளவு நடந்தபின்னாலும் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் போராடியபோது, கூட்டம் நடக்காவிட்டாலும் பரவாயில்லை என மத்திய அரசு பிடிவாதமாக நடந்துகொண்டதன் மூலம், ஜனநாயகத்தின் ஆணிவேரை ஊழல் கத்தியைக்கொண்டு அறுக்க முயன்றது மன்னிக்க முடியாததாகும்.
நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டால், பிரதமர் உள்பட உயர்நிலைப் பதவிகள் வகிக்கும் பலரும் அதன் முன்னால் விசாரணைக்கு அழைக்கப்படுவார்கள். எனவே அதைத் தவிர்த்ததாக காங்கிரஸ் தரப்பில் சொல்லப்படுகிறது.
1992-ம் ஆண்டு ஆகஸ்டு முதல் 93-ம் ஆண்டு டிசம்பர் வரை வங்கிப் பணபரிமாற்றங்களிலும் முதலீடுகளிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்கப்பட்டு, அப்போது மத்திய அரசில் நிதியமைச்சராக இருந்த இன்றைய பிரதமர் மன்மோகன்சிங் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் முன்னால் ஆஜராக மறுக்கவில்லை. 2002-ம் ஆண்டில் முன்னாள் நிதியமைச்சராக இருந்த கட்டத்திலும் அவர் பங்குச் சந்தை ஊழல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு முன்னால் ஆஜராகி சாட்சியம் வழங்கத் தயங்கவில்லை. ஆனால் இப்போது ஏன் பின்வாங்குகிறார்? நேர்மையாளர் எனப் பெயர்பெற்ற பிரதமரை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு எதிர்நிலை எடுக்கவைத்ததற்குப் பின்னணியில் இருந்த சக்திகள் எவை?
இன்னமும் பிரச்னையைத் திசைதிருப்பவே மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியான சிவராஜ் பாட்டீல் என்பவரை 2ஜி அலைக்கற்றை ஊழல் விசாரணையை நடத்தும்படி நியமித்துள்ளது. ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் நேரடியாக இந்த விசாரணையில் ஈடுபட்டிருக்கும்போது ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமித்து விசாரணை நடத்துவது மரபுகளுக்கு மட்டுமல்ல, நீதிக்கும் எதிரானதாகும். பிரச்னையைத் திசைதிருப்பவும், காலம்கடத்தவுமே இது பயன்படுமே தவிர, இதனால் முழு உண்மையும் வெளிவராது.
ராசாவை இனி மத்திய அரசு காப்பாற்றாது என்னும் நிலை வந்தபிறகு, அவரது கட்சியின் தலைவரான மு. கருணாநிதி அவரைக் காப்பாற்றவும் தனது குடும்பத்தினரைப் பாதுகாக்கவும் படாதபாடு படுகிறார். லஞ்சம் ஊழலுக்கு எதிரான நெருப்புப் போன்றவன் தான் எனக் கூறி, தனக்குத்தானே சான்றிதழ் வழங்கிக்கொள்கிறார்.
"தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்' என்பது பழமொழி. முதல்வராக இருந்து தமிழகத்தில் இவர் நடத்திய ஊழல்கள் குறித்து மத்திய அரசு 1975-ம் ஆண்டு சர்க்காரியா கமிஷனை அமைத்து விசாரணை நடத்தியது. எடுத்துக்காட்டாக, வீராணம் திட்டத்திலும், கூவம்நதியை மணக்க வைக்கும் திட்டத்திலும் இவரது அரசு நடத்திய ஊழல் விஞ்ஞானப்பூர்வமான ஊழல் என சர்க்காரியா கமிஷன் குற்றம்சாட்டியதை யாரும் மறந்திருக்க முடியாது. இந்த ஊழல்கள் சில கோடி பெறுமானவை மட்டுமே. நாளடைவில் தி.மு.க.வின் ஊழல் பெருகி, நூறு கோடிகளாகவும், ஆயிரம் கோடிகளாகவும் விரிவடைந்து கருணாநிதியின் சீடர் ராசாவின் காலத்தில் ஊழலின் சிகரத்தையே தொட்டுவிட்டது.
கழகத்தில் ராசாவைவிட மூத்தவர்கள், பாடுபட்டவர்கள் பலர் இருந்தபோதும், அவர்களைப் புறந்தள்ளி அனைவருக்கும் இளையவரான ராசாவுக்குக் கோடிகோடியாகப் பணம்புரளும் தொலைத்தொடர்புத்துறையைப் பெற்றுக்கொடுக்க கருணாநிதியும் அவரது குடும்பத்தில் சிலரும் போராடியதன் பின்னணி பளிச்செனப் புரிகிறது. நீரா ராடியா என்ற அரசியல் தரகரின் ஒலிப்பதிவுகள் இந்த உண்மையை அம்பலப்படுத்துகின்றன.
காலங்கடந்தேனும் உச்ச நீதிமன்றம் தனது நேரடியான கண்காணிப்பில் இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்துவதன்மூலம், உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்று நம்பலாம். ஆனாலும் இந்த ஊழலுக்குப் பின்னணியில் மறைந்து செயல்படும் நிழல் குற்றவாளிகளையும் கண்டுபிடித்துக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தவேண்டும்.
சுதந்திர இந்தியாவில், இதுவரை நடைபெற்ற பல்வேறு ஊழல்களில் மிகப்பெரிய ஊழல் அலைக்கற்றை ஊழல்தான். தமிழக அளவில் ஊழல் புரிந்த தி.மு.க. இந்திய அளவிலும் ஊழல் செய்து இமாலய சாதனை புரிந்துவிட்டது.






நன்றி :தினமணி  29 .12 .2010