நேதாஜி விமான விபத்தில் இறந்திருக்க முடியாது: டிரைவர் நிஜாமுத்தீன்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் தெரிவித்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் இறந்துவிட்டதாக சிலரும், உயிருடன் இருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர். எனவே, அவர் மரணம் குழப்பமாகவே உள்ளது. இந்நிலையில் நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை என்று அவரது டிரைவர் நிஜாமுத்தீன் என்பவர் தெரிவித்துள்ளார்.

நேதாஜியின் டிரைவராக இருந்ததாகக் கூறும் நிஜாமுத்தீன் (107) உத்தர பிரதேச மாநிலம் ஆஜம்கட் மாவட்டம், பிலாரியாகஞ்சில் உள்ள இஸ்லாம்புராவில் வசித்து வருகிறார்.

இது குறித்து நிஜாமுத்தீன் கூறியதாக செய்தித்தாள்களில் வந்த செய்தி:

1945-ம் ஆண்டு நடந்த விமான விபத்தில் நேதாஜி இறக்கவில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறுகிறார். இந்த விமான விபத்து நடந்து 3, 4 மாதங்களுக்குப் பிறகு நான் தான் அவரை பர்மா, தாய்லாந்து எல்லை அருகே உள்ள சிடங்பூர் ஆற்றங்கரையில் இறக்கிவிட்டேன். விமான விபத்தில் இறந்திருந்தால் நான் எப்படி அவரை சந்திக்க முடியும். அவர் விமான விபத்தில் இறந்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆனால் ஆற்றங்கரையில் இறக்கிவிட்ட பிறகு நேதாஜி என்ன ஆனார் என்று அவருக்குத் தெரியவில்லை. நேதாஜியுடன் தானும் வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஆனால் நேதாஜி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு சுதந்திர இந்தியாவில் சந்திப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நேதாஜிக்கு நெருக்கமான சுவாமி என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிஜாமுத்தீன் சந்தித்துள்ளார்.

நேதாஜியின் ஆசாத் ஹிந்த் பௌஜ் வழங்கிய நாடு திரும்பல் சான்றிதழ் தான் நிஜாமுத்தீனுக்கும் நேதாஜியின் இயக்கத்திற்கும் இருந்த தொடர்பின் சான்று. அதில் நேதாஜி இயக்கத்தின் நிவாரணம் மற்றும் நாடு திரும்பல் குழுவின் தலைவர் சுவாமி(எஸ்வி சுவாமி) கையெழுத்திட்டுள்ளார்.