பெங்களூர் குண்டுவெடிப்புகள்: தீவிரவாதிகளுடன் தொடர்பை ஒப்புக் கொண்ட மதானி

ஆகஸ்ட் 27, 2010
பெங்களூர்: பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தனக்குள்ள தொடர்பை கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



பெங்களூரில் 2008ம் ஆண்டு நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த நாசீர், சர்பார் நவாஸ், முனாப், முஜீப், சக்காரியா ஆகியோரை பெங்களூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரித்தபோது மதானியிடம் ஆலோசனை நடத்திவிட்டே இந்த குண்டு வெடிப்புகளை நடத்தியதாக வாக்குமூலம் அளித்தனர்.


இதையடு்த்து மதானியையும் குற்றவாளி பட்டியலில் போலீசார் சேர்த்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் பெங்களூர் போலீசார் விசாரித்தபோது தனக்கும் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று மறுத்துவந்தார்.

ஆனால் மதானியுடன் குண்டுவெடிப்பை நடத்தியவர்கள் தொலைபேசியில் பேசியதற்கான ஆதாரங்களை போலீசார் காட்டினர்.


இதையடுத்து மதானி அவர்களுடனான தொடர்பை ஒப்புத் கொண்டதாகத் தெரிகிறது.


பெங்களூர் குண்டு வெடிப்பு பற்றி எனக்கு முன் கூட்டியே தெரியும். இது தொடர்பாக அவர்கள் என்னிடத்தில் பேசினர். நான் அவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி கூறினேன் என்று மதானி கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.