முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டுக்கு கருத்தொற்றுமை உருவாக்க வேண்டும்: பிரதமர் மன்மோகன் சிங்

ஹைதராபாத், ஜூலை 8: முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு தேசிய அளவிலான கருத்தொற்றுமையை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி ஹைதராபாதில் உள்ள ஜாமியத் உலமா-இ- ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பு அனுப்பிய கோரிக்கை மனுவுக்கு பதில் அனுப்பியுள்ளார் மன்மோகன். மன்மோகன் அனுப்பியுள்ள கடிதத்தில் இக் கருத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2007-ம் ஆண்டில் சிறுபான்மை மக்களுக்காக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், 2010-11-ம் ஆண்டில் ரூ.2600 கோடி ஒதுக்கப்பட்டு, அவர்களின் வாழ்வாதாரங்கள் மேம்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வோராண்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு
வருகிறது.
சிறுபான்மையினர் அதிகம் வாழும் நாட்டின் 80 மாவட்டங்களில் ரூ.2000 கோடியில் பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதில் மன்மோகன் குறிப்பிட்டுள்ளார்.